நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3945
Zoom In NormalZoom Out


கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.
 

இது  தேவரும்  மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப்பகுதி
யிரண்டுங்  கூறி  இன்னும்  அத்தேவரைப்போல்  ஒருவழிப் பிறக்கும்
பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டிணைக்கு உரிய என்கிறது.

(இ-ள்)     கொடிநிலை  -  கீழ்த்திசைக்கண்ணே  நிலைபெற்றுத்
தோன்றும்  வெஞ்சுடர்  மண்டிலம்;  கந்தழி  - ஒரு பற்றுக்கோடின்றி
அருவாகித்  தானே  நிற்குந்  தத்துவங்  கடந்த  பொருள்;  வள்ளி -
தண்கதிர்  மண்டிலம்; என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் -
என்று சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட
மூன்று   தெய்வமும்;  கடவுள்  வாழ்த்தொடு  கண்ணிய  வருமே  -
முற்கூறிய அமரரோடே கருதுமாற்றான் தோன்றும் எ-று.

‘‘பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை
மையறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு
மின்னா விடும்பைசெய் தாள்’’
               (கலி.141)

என்றவழிக்   கீழ்த்திசைக்கண்ணே  தோன்றும்  மண்டில  மென்றாற்
போலக் ‘கொடிநிலை’ யென்பதூஉம் அப்பொருடந்ததோர் ஆகுபெயர்.

இனி எப்புறமும் நீடுசென்று எறித்தலின்  அந்நீடனிலைமை பற்றிக்
கொடிநிலை யென்பாருமுளர்.

‘‘குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே’’   (குறுந்.132)

தொ. பொ. நச். (1) 14

என்றாற்போல,    வள்ளியென்பதுவுங்  கொடியை; என்னை? பன்மீன்
தொடுத்த  உடுத்தொடை  கொடியெனப்படுதலின், அத் தொடையினை
இடைவிடா  துடைத்தாதலின் அதனை அப்பெயராற் கூறினார், முத்துக்
கொடி   யெனவும்   மேகவள்ளியெனவுங்  கூறுவது  போல.  கந்தழி
அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையே வைத்தார்.

இனி     அமரரென்னும்   ஆண்பாற்   சொல்லுள்   அடங்காத
பெண்பாற்றெய்வமும்    வள்ளியென்னுங்    கடவுள்   வாழ்த்தினுட்
படுவனவாயின,   பாடா   ணெனப்படா  வாயினுமென்பது;  என்னை?
ஞாயிறு  நெருப்பின்றன்மையும்  ஆண்டன்மையும்   உடைமையானுந்,
திங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமையானு  மென்பது.
அல்லதூஉம்,  வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளி
யென்பதூஉமாம் என்பது.

உ-ம்:

‘‘மேகத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா
னாகத்தா னீமறைய நாட்கதிரே - யோகத்தாற்
காணாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர்
நாணாத கண்ணெனக்கு நல்கு’’

இது கொடி