நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5259
Zoom In NormalZoom Out


 

மணியென
வயின்வயி னிமைக்கும் வாங்குபல் லுருவிற்
காண்டகு கமழ்கொடி போலும்என்
ஆண்டகை யண்ணலை யறிவுதொலைத் ததுவே.”

இஃது இவள்போலும் இறைவனை வருத்தினாளெனப் பாங்கன் ஐயுற்றது.

“கண்ணே, கண்ணயற் பிறந்த கவுளழி கடாஅத்த
அண்ணல் யானை யாரியர்ப் பணித்த
விறற்போர் வானவன் கொல்லி மீமிசை
அறைக்கான் மாச்சுனை யவிழ்ந்த நீலம்
பல்லே, பல்லரண் கடந்த பசும்பூண் பாண்டியன்
மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்துறை
ஊதை யீட்டிய வுயர்மண லடைகரை
ஓத வெண்டிரை யுதைத்த முத்தம்
நிறனே, திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த
விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்
நலனணி யரங்கிற் போகிய மாவின்
உருவ நீள்சினை யொழுகிய தளிரே
என்றவை பயந்தமையறியார் நன்று
மடவர் மன்றவிக் குறவர் மக்கள்
தேம்பொதி கிளவி யிவளை
யாம்பயந் தேமெம் மகளென் போரே.”

இது தலைவியை வியந்தது.

“பண்ணாது பண்மேல்தேன் பாடுங் கழிக்கானல்
எண்ணாது கண்டாருக் கேரணங்காம் - எண்ணாது
சாவார்சான் றாண்மை திரிந்திலார் மற்றிவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார்.”       (திணைமாலை.நூற்.47)

பாங்கன் தலைவனை வியந்தது.

“பூந்த ணிரும்புனத்துப் பூசல் புரியாது பூழி யாடிக்
காந்தட் கமழ்குலையாற் காதன் மடப்பிடிதன்
                                  கவுள்வண்டோச்ச
வேந்தன்போ னின்ற விறற்களிற்றை வில்லினாற் கடிவார்
                                          தங்கை
ஏந்தெழி லாக மியையா தியைந்தநோ யியையும் போலும்.”

இது தலைவற்கு வருத்தந்தகுமென   அவனை வியந்தது.  “வியமுறு
துயரமொடு” என்னும் செய்யுளுங் கொள்க.

இனிப்    பாங்கன்  தலைவி  தன்மை  தலைவற்குக்  கூறுவனவும்
இடங்காட்டுவனவுஞ்   சான்றோர்   செய்யுளுள்   வரும்வழிக் காண்க.
ஆண்டுச்  சென்ற  தலைவன்  இடந்தலைப்பாட்டிற்  கூறியவாற்றானே
கூடுதல்கொள்க.