நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5343
Zoom In NormalZoom Out


 

பெருங்க னாடன் வருங்கொ லன்னாய்.”     (ஐங்குறு.218)

இது,  தமர்  வரைவுமறுத்துழி   ஆற்றாத   தலைவிக்குத்  தோழி,
தீயகுறி  நீங்கி நற்குறி  தனக்குச் செய்யக்கண்டு கடிதின் வரைவரெனக்
கூறியது.

முன்னிலை அறன் எனப்படுதல் என்ற இருவகைப் புரைதீர்  கிளவி
தாயிடைப் புகுப்பினும் (அறனெனப்படுதல் இருவகைப் புரைதீர்

முன்னிலையென்று  கிளவி  தாயிடைப்  புகுப்பினும்) - அறனென்று
சொல்லப்படுந் தன்மை இருவர் கண்ணுங் குற்றந்தீர்ந்த எதிர்ப்பாடென்று
செவிலியிடத்தே கூறி அக்கிளவியை நற்றாயிடத்துஞ் செலுத்தினும்:

என்றது,   புனறருபுணர்ச்சியும்,   பூத்தரு   புணர்ச்சியுங்,   களிறு
தருபுணர்ச்சியும் போல்வன செவிலிக்குக்   கூறி  அவள்  நற்றாய்க்குக்
கூறுதலை நிகழ்த்துவித்தலாம். எனவே,  அவள்  தந்தைக்குந்  தன்னை
யர்க்கும்   உணர்த்துதலும்   அதனை   மீண்டு   வந்து   தலைவிக்கு
உணர்த்துதலும்  பெற்றாம்.  அவ்வறத்தொடு  நிலை  எழுவகைய (207)
எனப் பொருளியலுட் கூறுப.

உ-ம்: “காமர்  கடும்புனல்  கலந்தெம்மோ   டாடுவாள்” (கலி.39)
என்னுங் குறிஞ்சிக்கலியுள்,  “தெருமந்து   சாய்த்தார்  தலை”  எனப்
புனறருபுணர்ச்சியான்    தோழி    செவிலிக்கு     அறத்தொடுநிற்பச்
செவிலி நற்றாய்க்கு    அறத்தொடுநிற்ப   அவள்    ஏனையோர்க்கு
அறத்தொடு நின்றவாறு காண்க.

“வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பி னல்லது - கோடா
எழிலு முலையு மிரண்டற்கு முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து.”       (திணை.நூற்.15)

“சான்றோர் வருந்திய வருத்தமு நுமது
வான்றோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள்
வருமுலை யாகம் வழங்கின் நன்றே
அஃதான்று, அடைபொருள் கருதுவிர் ஆயிற் குடையொடு
கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் வஞ்சியோ
டுள்ளி விழவின் உறந்தையுஞ் சிறிதே.”

இவை நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நின்றன.

“அன்னாய் வாழிவேண் டன்னை யென்னை
தானு மலைந்தா னெமக்குந் தழையாயின
பொன்வீ மணியரும் பினவே
யென்ன மரங்கொலவர் சார லவ்வே.”       (ஐங்குறு.201)

இது தழைதந்தமை கூறிற்று.

“சுள்ளி சுனைநீ