நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5353
Zoom In NormalZoom Out


 

றேற்றா ளிவள்”                           (அகம்.28)

என்றலுங்,

“கண்கோ ளாகநோக்கிப் பண்டு மினையையோ”    (நற்.55)

என்றலும் போல்வன பிறவுங் கொள்க. (24)

நற்றாய்க்குரிய கூற்று உரைத்தல்

116. தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே

இது,   செவிலிக்கு   உரியன  கூறி   நற்றாய்க்கு  உரிய  கூற்றுக்
கூறுகின்றது.

(இ-ள்.) உணர்வு உடம்படின் - அங்ஙனஞ் செவிலி உணர்ந்தாங்கே
நற்றாயும் மதியுடம்படில்; தாய்க்கும் வரையார் - நற்றாய்க்கும் முற்கூறிய
பதின்மூன்று  கிளவியும்  பிறவுமாகக்  கொண்டு   எடுத்த   மொழிதல்
வரையார் எ-று.

‘தாய்க்கும்’  என்றார்,  இவட்கு அத்துணை பயின்றுவாரா என்றற்கு.
அது நற்றாய் இல்லறம்  நிகழ்த்துங் கருத்து வேறு உடைமையின் உற்று
நோக்காள்; செவிலியே தலைவியை உற்று நோக்கி   ஒழுகுவாளாதலின்.
இலக்கணமுண்மையின் இலக்கியம் வந்துழிக் காண்க. (25)

நற்றாய்க்குஞ் செவிலிக்குமுரியதோர் இலக்கணம் உரைத்தல்

117. கிழவோன் அறியா வறிவினள் இவளென
மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்
ஐயக் கிளவி யறிதலும் உரித்தே.

இஃது  அங்ஙனங்  களவு  வெளிப்பட்ட   பின்னர்  நற்றாய்க்குஞ்
செவிலிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.)  கிழவோன் அறியா அறிவினள் இவளென  ஐயக்கிளவி -
நங்குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து கூடாத  அறிவினையுடையள்
இவளென்று  தம்  மனத்தே  ஐயமுற்று  பிறரோடு உசாவுங் கிளவியை;
மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் அறிதலும் உரித்தே- குற்றமற்ற
சிறப்பினையுடைய  அந்தணர்   முதலியோரிடத்தே   கூறி   அதுவும்
முறைமை யென்று அவர் கூற அறிதலும் உரித்து எ-று.

என்றது, ‘மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே’  (சூ.93)  என  முற்
கூறினமையின் தலைவன் தன் குலத்தின்  உயர்ந்தமை  அறிந்தவிடத்து,
இங்ஙனம் கூடுதல் முறையன்றென்று   ஐயுற்ற   செவிலியும்  நற்றாயும்,
உயர்ந்தோரைக் கேட்டு இதுவும் கூடுமுறைமை என்றுணர்வர் என்பதாம்.
இலக்கணமுண்மையின் இலக்கியமும் அக்காலத்து உள வென்றுணர்க.
(26)

தலைவிக்குரியதோரிலக்கண முரைத்தல்

118. தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்