| பேர் உகிர்ப் பணைத் தாள், அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே. பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும், அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும், கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன, அடையா வாயில் அவன் அருங் கடை குறுகி செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும், இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும், செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த; அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும், ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும், வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்தக் கருதியது முடித்தலும், காமுறப் படுதலும், ஒரு வழிப் படாமையும், ஓடியது உணர்தலும், அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த; அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும், வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும், பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்தப் பல் மீன் நடுவண் பால் மதி போல, இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி பைங் கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன, அம் கோட்டுச் செறித்த அவிழ்ந்து வீங்கு திவவின்; மணி நிரைத் |