பெரும்பாணாற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   23
Zoom In NormalZoom Out

பை தீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்.
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்,
வான் மடி பொழுதில், நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கிப்
புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்
அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள்,
பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கித்
தொகு வாய் வேலித் தொடர் வலை மாட்டி,
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடுஞ் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇ,
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ் சுரம் இறந்த அம்பர்ப் பருந்து பட,
ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி,
வைந் நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடி நாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்;
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்,
வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு
கடுந் துடி தூங்கும் கணைக் கால் பந்தர்த்
தொடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர்;
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பைக்
கொடு நுகம் தழீஇய புதவின், செந் நிலை
நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில்,
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன,
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின்