| அன்னை அறியினும் அறிக; அலர்வாய் அம் மென் சேரி கேட்பினும் கேட்க; பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி, கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி, கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும், வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது இருந்தனமாக, எய்த வந்து, 'தட மென் பணைத்தோள் மட நல்லீரே! எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்; மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?' என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு, இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி, 'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த கொழுமீன் வல்சி' என்றனம், இழுமென. 'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணாமோ?' எனக் காலின் சிதையா, நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்! ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி, யான் 'பெயர்' என்ன, நோக்கி, தான் தன் நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் என்றும் என் மகட்கே. |
| உள் ஆங்கு உவத்தல் செல்லார்; கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி வருவர்-வாழி, தோழி!-அரச யானை கொண்ட துகிற் கொடி போல, அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, மழை என மருண்ட மம்மர் பல உடன் ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அத்தக் கேழல் அட்ட நற்கோள் செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, மண்டு அமர் அழுவத்து, எல்லிக் கொண்ட புண் தேர் விளக்கின், தோன்றும் விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே!. |