இனி, நின்மகிழிருக்கைக்கண் நம்முள் மிக அணித்தாகக் காணுங் காட்சி உளதாகவென்றுமாம். இதனாற் காட்சியுண்டாகாதென்பது குறிப்பு. இனி, குறுநணி காண்குவதாக’ என்பதற்கு நம்மிடத்து மிகவும் மனத்தாற்காணுங் காட்சி உளதாகவென்பது கூடாது, நீ செய்த கொடுமையானென்றுரைப்பினும் அமையும்.
(210)
மன்பதை காக்குநின் புரைமை நோக்கா
தன்புகண் மாறிய வறனில் காட்சியொடு
நும்ம னோருமற் றினைய ராயின்
எம்ம னோரிவட் பிறவலர் மாதோ
செயிர்தீர் கொள்கை யெம்வெங் காதலி
உயர்சிறி துடைய ளாயி னெம்வயின்
உள்ளா திருத்தலோ வரிதே யதனால்
அறனில் கூற்றந் திறனின்று துணியப்
பிறனா யினன்கொ லிறீஇயரென் னுயிரென
நுவல்வுறு சிறுமையள் பலபுலந் துறையும்
இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை
விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வனிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறத்தே.
திணையும் துறையும் அவை. சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது, (இ-ள்.) உயிர்ப்பன்மையைக்காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது காதல் கண்மாறிய அறமில்லாத பார்வையுடனேகூடி நும்போல்வார் யாவரும் இதற்கு ஒத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின் எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக்கடவர்; குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பிய காதலி இறந்துபடாது உயிர்வாழ்வுடையாளாகக் கூடின் எம்மிடத்து நினையாதிருத்தல் அரிது; அதனால், அறனில்லாத கூற்றம் திறப்பாடின்றி உயிர்கொளத் துணிய இறந்துபட்டான் கொல்லோ? என்னுயிர் கெடுவதாகவென்று சொல்லுதலுற்ற நோயையுடையாளாய்ப் பலபட வெறுத்துறையும் மனைவியது துன்பம் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடைகொண்டேன்; வாழ்வாயாக; இறைவ! இதனைப் பாராய்: இன்னாமையையுடைய நெஞ்சத்துடனே போவேன், நின்னை வெகுண்டாரது அணுகுதற்கரிய காவலையுடைய முனையிடத்து அரணைப்போலப் பெரிய செயலற்ற எனது வறுமையை முன்போகவிட்டு-எ - று. குருசிலே! நும்மனோரும் இனையராயின் எம்மனோர் இவட்பிறவார்; எம் காதலி உயிர் சிறிது உடையளாயின் நினையாதிருத்தல் அரிது;அதனால், அம்மனையோள் இடுக்கண் தீர்க்கவேண்டி இப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக் கையற்ற என் புலம்பு
முந்துறுத்துச் செல்வேன்; வாழியரெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. ‘உதுக்காண்’என்றது அச்செலவை. என்வறுமை என்னை விட்டு் நீங்கப்போதலையொழியப் புலம்பை முந்துறுத்துக்கொண்டு போகாநின்றேனென இரங்கிக் கூறியவதனால், வாழியர் குருசில் என்பது இகழ்ச்சிக்குறிப்பாயிற்று. ‘உயிர்வெங் காதலி’ என்று பாடமோதுவாரும் உளர்.
(211)
அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலே
றணங்குடை யரவி னருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீண்மலை மிளிரக்
குன்றுதூ வெறியு மரவம் போல
முரசெழுந் திரங்குந் தானையொடு தலைச்சென்
றரைசுபடக் கடக்கு முரைசா றோன்றனின்
உள்ளி
|