வரைப்பின் மனையென இயையும். ‘வள்ளிய னாகலின் வணங்குவ னிவனென’ என்று பாடமாயின், வண்மையையுடையனாதலால் இவன் எமக்குத் தாழ்ந்து பரிசிலளிப்பனெனக் கருதியென்க. ‘வள்ளியை யாகலின் வணங்குவ னிவனெனக், கொள்ளா மாந்தர் கொடுமை
கூற’ என்றதற்கு வள்ளியையாதலின் இவனை வணங்குவேனென நினைந்து வணங்க அதுபாராது நின்பாற் பரிசில் பெறாத மாந்தர்.. தூவவெறியுமென்பது, தூவெறியுமென வகரங்கெட முடிதல் புறநடையாற்கொள்க; விகாரமெனினும் அமையும். ‘தூவவெறியும்’என்பதூஉம் பாடம். புறநிலை என்பதற்குப் புறங்கடை நின்றநிலையென்றுமாம். ‘இல்லெலி மடிந்த தொல்சுவர்’ என்பதற்கு இல்லெலிதான் தொழில்மடிந்த தொல்சுவரென்று உரைப்பினும் அமையும். நின்னைக் கொடுமை கூறவென்று உரைப்பினும் அமையும்.
(212)
நுங்கோ யாரென வினவி னெங்கோக்
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீட வாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ
வைகுதொழின் மடியு மடியா விழவின்
யாணர்நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப்பசிப்பகை யாகிக்
கோழி யோனேகோப்பெருஞ் சோழன்
பொத்தி னண்பிற் பொத்தியொடுகெழீஇ
வாயார்பெருநகை வைகலு நக்கே.
திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது. (இ-ள்.) உம்முடைய இறைவன் யார்தானென்று கேட்பீராயின், எம்முடைய இறைவன் களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை ஆமையிறைச்சியுடனே வேட்கைதீர அக்களமர் உண்டு ஆரன்மீனாகிய கொழுவிய சூட்டை அழகிய கதுப்பகத்தேயடக்கி மதுவுண்ட மயக்கத்தால் வைகுந்தொழிலொழியும் நீங்காத விழவினையுடைய புது வருவாயுளதாகிய நல்ல சோழநாட்டுள்ளும் பாணருடைய வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப் பகையாய் உறையூரென்னும் படைவீட்டிடத்திருந்தான், கோப்பெருஞ்சோழன்; புரையில்லாத நட்பினையுடைய பொத்தியென்னும் புலவனொடு கூடி மெய்ம்மையார்ந்த மிக்கமகிழ்ச்சியை நாடோறும் மகிழ்ந்து-எ - று. நன்னாட்டுள்ளுமென்ற உம்மை சிறப்பும்மை. கோழி - உறையூர். நுங்கோ யாரென வினவின், எங்கோக் கோப்பெருஞ்சோழன், அவன் பசிப்பகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத் திருந்தானெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆகிக் கெழீஇ நக்கென்னுஞ்
செய்தெனெச்சங்களைக் கோழியோ னென்னும் வினைக்குறிப்போடு முடிக்க.
(213)
மண்டம ரட்ட மதனுடை நோன்றாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
பொங்குநீ ருடுத்தவிம் மலர்தலை யுலகத்து
நின்றலை வந்த விருவரை நினைப்பிற்
றொன்றுறை துப்பினின் பகைஞரு மல்லர்
அமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவர்
நினையுங் காலை நீயு மற்றவர்க்
கனையை யல்லை யடுமான் றோன்றல்
பரந்துபடு நல்லிசை யெய்தி மற்றுநீ
உயர்ந்தோ ருலக மெய்திப் பின்னும்
ஒழித்த தாய மவர்க்குரித் தன்றே
அதனால், அன்ன தாதலு மறிவோய் நன்றும்
இன்னுங் கேண்மதி யிசைவெய் யோயே
நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த
எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
அதனால், ஒழிகதி லத்தைநின் மறனே வல்விரைந்
தெழுமதி வாழ்கநின் னுள்ள மழிந்தோர்க்
கேம மாகுநின் றாணிழன்
|