சொல்லி வெறுத்தி நீ-எ - று. யான் பிற்பட வந்ததற்கு என்னைப் புலந்து என்னோடு சொல்லாடா திருந்தாய் நீயென்றும், இவனுடனே வடக்கிருந்தோர்களும் எதிரேற்றுக் கொள்ளாமைநோக்கி நின்குறிப்பிற்கு ஏற்பப் புலந்தார் பலரென்றும் உரைப்பினும் அமையும். ‘உள்ளாற்றுக்கவலை’ என்பதற்கு வழிக்குள்ளாகிய நாற்றிசையும் கூடிய இடமென்றுமாம்; கவர்த்தவழிக்குள்ளென்றுரைப்பாரும் உளர். அரசுதுறந்து வடக்கிருந்து உயிர்நீத்த உள்ளமிகுதியான் மள்ள வென்றார். (220)
பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டுவந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது. (இ - ள்.) பெரிய சோற்றையுண்டாக்கிப் பல்யாண்டு பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன் அவ்வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின்கட் கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மைபோல யான் இறந்துபடுதலின்றிக் கலங்கினேனல்லனோ? பொன்னான் இயன்ற மாலையையுடைய தேர்வண்மையைச் செய்யும் கிள்ளி போகப்பட்ட பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து-எ - று. மூதூர்மன்றங் கண்டு கலங்கினேனல்லனோவெனக் கூட்டுக. மன்றம் - ஈண்டுச் செண்டுவெளி. அழுங்கல் - முன்புள்ள ஆரவாரமுமாம். இறந்தவென்று சொல்லுதல் இன்னாமையால் போகியவென்றார். (221)
பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவன் நடுகற்கண்டு அவர் பாடியது. (இ - ள்.) பாடுநர்க்குக்கொடுத்த பலபுகழினையும் உடையன்; கூத்தர்க்குக் கொடுக்கப்பட்ட மிக்க அன்பினையும் உடையன்; அறத்திறமுடையோர் புகழப்பட்டநீதிநூற்குத்தக ஆராய்ந்து நடத்திய செங்கோலை உடையன்; சான்றோர் புகழப்பட்ட திண்ணிய நட்பினையுடையன்; மகளிரிடத்து மென்மையை யுடையன்; வலியோரிடத்து மிக்கவலியையுடையன்; குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடம்; அத்தன்மையை யுடையோனென்று கருதாது அத்தகுதியையுடையோனை அவ்வாறு |