மதியமும் ஞாயிறும்போல மன்னுகவென்றமையான் வாழ்த்தியலுமாயிற்று. (7) களிறு கடைஇயதாட் கழலுரீஇய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையாற் கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து மாமறுத்த மலர்மார்பிற் றோல்பெயரிய வெறுழ்முன்பின் எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலி னல்ல இல்லவா குபவா லியறேர் வளவ தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து மீனிற் செறுக்கும் யாணர்ப் பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே. திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை; மழபுலவஞ்சியுமாம். சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது. (இ - ள்.) களிற்றைச் செலுத்திய தாளையும், வீரக்கழலுரிஞ்சிய இலக்கணத்தாற்றிருந்திய அடியினையும், அம்பொடு பொருது இடக் கவிந்த வள்ளிய கையுடனே கண்ணிற்கு விளங்கும் அழகினையுடைய வில்லையும், திருமகள் பிறர்மார்பை மறுத்தற்கு ஏதுவாகிய பரந்த மார்பினையும், யானையைப்பெயர்த்த மிக்க வலியினையுமுடைய, பகலுமிரவும் எண்ணாது பகைவரது ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியின்கண்ணே தம்சுற்றத்தை அழைத்தலுடனே அழுகின்ற கூவுதலையுடைய ஆரவாரத்தோடு கூடிய கொள்ளையை விரும்புதலுடையை; ஆதலான், நல்ல பொருள்கள் இல்லையாகுவனவால்; இயற்றப்பட்ட தேரையுடைய வளவ! குளிர்ந்த நீர்பரந்த ஓசையையுடைய உடைப்புக்களை மண்மறுத்தலான் மீனாலடைக்கும் புதுவருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடையமாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் -எ - று. திருந்தடி |