கணைபொருது (3) என்றது, அதனொடு மருவுதலை. தாளையும், அடியையும், கையுடனே சாபத்தையும், மார்பையும், முன்பையுமுடைய வளவ! நீ கொள்ளைமேவலையாதலின், யாணரையும் வைப்பினையுமுடைய பிறர்நாடு, நல்ல இல்லவாகுபவெனக் கூட்டுக. நாடு நல்ல இல்லவாகுபவென இடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்து மேலேறி நின்றது. இனித் தாளாலும் அடியாலும் கையாலும் சாபத்தாலும் மார்பாலும் முன்பாலும் கொள்ளைமேவலையாகலினென ஆலுருபு விரித்துரைப்பினும் அமையும். இது, பிறரகன்றலைநாடு நல்ல இல்லவாகுப வென்றமையிற் கொற்றவள்ளையும், ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலையென்றமையின் மழபுல வஞ்சியுமாயிற்று. (8) வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே. திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி; பூவைநிலையுமாம். சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. (இ - ள்.) உலகத்தைக் காக்கும் அரசர் வழிபாடு சொல்லிநடக்க நுகரும் இன்பத்தை விரும்பிப் பூமி பிறவேந்தருக்கும் பொதுவென்னும் வார்த்தைக்குப் பொறாது தன் நாடு இடஞ்சிறிதென்னும் மேற்கோள் செலுத்த மடியாத உள்ளத்தையும் பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும் வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையையுமுடைய சேரலாதனை எவ்வாறொப்பை? மிக்க செலவையுடைய மண்டிலமே! நீ பகற்பொ |