(இ - ள்.) போரிற்கு நன்மையையுடையவாகிய விரைந்த குதிரையுடனே முகில்போலும் நிறத்தையுடைய பரிசையைப் பரப்பி, முனையிடங் கலங்க மேற்சென்று, அவரது நெல்விளைகழனியைக் கொள்ளையூட்டி, மனையிடத்து மரமே விறகாகக் காவற் பொய்கைகளின் நீரிலே களிற்றைப் படிவித்து, விளக்கமுண்டாக இடப்பட்ட நாடுசுடுநெருப்பினது ஒளிதான் விடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது செக்கர்நிறம் போலத் தோன்ற இடமில்லையாகச் சென்று விடும் எல்லையில்லாத படையினையும், துணைப்படை வேண்டாத போர்வெற்றியினையும், புலால்நாறும் வாளினையும் பூசிப்புலர்ந்த சாந்தினையும், முருகனது வெகுட்சிபோலும் வெகுட்சியினையுமுடைய உட்குப்பொருந்திய தலைவ! ஒன்றோடொன்று கலந்த வள்ளையையும் மலர்ந்த ஆம்பலையும் குளிர்ச்சியையுடைய பகன்றையையும் பழத்தையுடைய பாகலையும் உடைத்தாகிய கரும்பல்லது பிறிதுகாடறியாத பெரிய மருதம் பாழாகக் காவலையுடைய நல்ல நாட்டை ஒள்ளிய தீயை ஊட்டி அஞ்சத்தக்க நல்ல போரைச் செய்ய, நின்கருத்திற்கேற்ப ஒரு பெற்றிப்படப் பொருதன, பெரும! நின்னுடைய களிறுகள் - எ - று. |