முன்யா னிவனை முருக்கலும் வேண்டினென் பின்யா னிவனைப் பெருக்கலு முற்றனென் எமர னாயி னிறைகொடுத் தகல்க அமர னாயி னமைவொடு நிற்கென அடல்வேற் றானை யாருணி யரசற்கு ஞாலத் தின்னுயிர் வாழ்வோர் நாப்பட் காலம் பார்க்குங் காலன் போல வெல்போ ருதயணன் வெஃறுணை யாகப் பல்கோ டியானைப் பாலகன் வருமெனக் கணக்குத்துறை முற்றிய கடுஞ்சொ லோலை அரக்குப்பொறி யொற்றி யாணையிற் போக்கி எண்படைத் தலைவரு மிருபிறப் பாளரும் எண்பதி னாயிர மிளம்பது வாய்களும் ஏற்றினம் வரூஉ நாற்றங் கழுமிய மதங்கவுட் பிறந்த கதந்திகழ் படாத்த ஐந்நூ றியானையு மாயிரம் புரவியும் எண்பது தேரு மிருவகைத் தொறுவும் நன்மணி யைம்பா னருமதை யுள்ளுறுத் திரங்குபொற் கிண்கிணி யரங்கிய லாயத்து நாடக மகளிர் நாலெண் பதின்மரும் கோடிய லூர்தியுங் கொண்டுவிசி யுறுத்துக் கோடி விழுநிதி கொண்டகஞ் செறிக்கப் பாடியல் பண்டியொடு படைசெலல் விதித்து வளங்கெழு தாயத்து வழியடை யாகிய இளங்கோ நம்பியு மிவனொடு செல்கென மாண்மொழிக் குருசி லாணைவைத் தகம்புக நாள்கொண் டெழுவது நாளை யாமென அமைச்சனுஞ் செவிலியு மமைந்த வகையால் நாள்கொளற் கிருந்துழி நன்னகர் கேட்பக் கழிந்த யாண்டுங் கயநீ ராட்டணி ஒழிந்ததன் றண்ட முயர்கொடி மூதூர்க் குருதி வெள்ளங் கூலம் பரப்பி அழுகுரன் மயங்கி வல்லற் றாக மதவலி வேழ மைய லுறுத்த கடவுள் யானெனக் கடவுட் காட்டிப் பேரிசைக் கடவுட் பெருநகர்த் தோன்றிச் சேரி யாயத்துச்

|