பெயரியலுள்ளும், வினையிலக்கணம் வினையியலுள்ளும், இடைச்சொல்லிலக்கணம் இடைச்சொல்லோத்தினுள்ளும், உரிச்சொல்லிலக்கணம் உரிச்சொல் லோத்தினுள்ளும், எஞ்சிய வெல்லாம் எச்சவியலுள்ளும் உணர்த்தினா ரென்று கெள்க. இவ்வகையினா னோத்தும் ஒன்பதாயிற்று.
பொருளுணர்த்துவன தனிமொழியாதலால், தொடர்மொழி யெனவகுத்ததனாற் பயனென்னை யெனின், பொருளுணர்த்துதற்குச் சிறப்புடையன தொடர்மொழியென்று கொள்க. என்னை சிறந்தவாறெனின், சாத்தனென்றவழிப் பொருண்மை மாத்திர முணர்த்துதலல்லது கேட்டார்க் கொரு பயன்பட நில்லாமையின், சாத்தனுண்டானெனப் பயன்பட வரூஉந் தொடர்மொழியே பொருள் இனிது விளக்குவதென்க. சொல்லிலக்கணம் அறிந்ததனாற் பயன், தொடர்மொழியாகிய வாக்கியத்தினைப் பிரித்துப் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்லெனக் குறியிடவேண்டுதலின் அதன்பிற் கூறப்பட்டது.
இனி, எழுவாய் வேற்றுமையையும் விளி வேற்றுமையையும் எழுத்ததிகாரத்துள் அல்வழிக்கண்ணே முடித்தா ராதலான் அவற்றை வேற்றுமைத் தொடரென்ற லமையாதெனின்:-- அவை வேற்றுமை யென்று குறிபெறுதலானும், எழுவாய் வேற்றுமை கிளவியாக்கத்தொடு மணந்துகிடப்ப வைத்தலானும், விளிவேற்றுமை எழுவாயது திரிபாதலானுமமையு மென்க.
இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட வொன்ப தோத்தினுள்ளும் முதற் கண்ணது கிளவியாக்கம். அது கிளவிய தாக்கமென விரியும். அதற்குப் பொருள், சொல்லினது தொடர்ச்சி யென்றவாறு. சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருண்மேலாகு நிலைமையைக் கிளவியாக்க மென்றார். அது வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகி, அதனையுடைய வோத்திற்குப் பெயராயிற்று.
இவ்வோத்தினுள் இச் சூத்திரமென்னுதலிற்றோ வெனின், சொல்லிலக்கண முணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள். உயர்தலென்பது மிகுதல் திணை யென்பது பொருள். என்மனாரென்பது என்று சொல்லுவார், என்றவாறு, மக்களென்பது மக்களென்னும் பொதுப்பொருண்மை, சுட்டென்பது குறிப்பு, இனச்சுட்டில்லா வெனவும், தெய்வஞ்சுட்டிய வெனவும் ஓதினாராகலின், அது சுட்டுப்படும் பொருண்மேல் ஆகுபெயராய் நின்றது ஏயென்ப தீற்றசை: அல் என்பது அல்லாமை, திணை யென்பதற்கும் என்மனா ரென்பதற்கும் மேலுரைத்தவாறே கொள்க. அவரலவென்பது மக்களல்லாத பொருள். பிற என்பது பிற பொருள். மக்களல்லாதவும் பிறவும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஆயென்பது அவ்வென்னுஞ் சுட்டு நீண்டிசைத்தது. இருதிணை யென்பது இரண்டு திணையின்கண்ணும், என்றவாறு, கண்ணென்னும் உருபும் உம்மும் தொக்கு நின்றன. இசைக்குமன சொல் லென்பது ஒலிப்பன சொல்லாவன, என்றவாறு.
உலகத்துப் பொருளெல்லாவற்றினும் மக்களென்று சுட்டப்படும். பொருளை உயர்திணையென்று சொல்லுவர். அவரல்லாத பொருளையும் பிறபொருளையும் அஃறிணையென்று சொல்லுவர் ஆசிரியர். அவ்விரு திணையின்கண்ணு மொலிப்பன சொல்லாவன என்றவாறு.
எனவே, உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் எனச் சொல் இருவகையாமென்பது பெறுதும், அஃதேல், திணையிடமாக, அத்திணைக்கட் பிறவற்றை யிசைத்தல் வேண்டுமெனின், ஒக்கும். அவ் விருதிணைக்கண்ணு முளவாகிய பாலினையே சொற்களிசைப்பன வென்ப. மேல் எழுத்ததிகாரங் கூறி, இனிச் சொல்லதிகாரங் கூறுவார், சொல்லாவ தித்தன்மையதென அதனிலக்கணங் கூற வேண்டுதலின், இச் சூத்திரம் முற்கூறப்பட்டது, அஃதற்றாக, தேவரை யறியுஞ்சொல் அஃறிணை யாகுமோ வெனின், அஃதாகாவாறு முன்னர்க் கூறப்படும்.
உயர் என நிற்பத் திணை யென வந்தசொல் எவ்வாறு வந்ததெனின், ஒரு சொன்முன் ஒரு சொல் வருங்கால், தொகைநிலை வகையான் வருதலும், தொகாநிலை வகையான் வருதலுமென இரண்டல்ல தில்லை. அவற்றுள் தொகைநிலை வகையான் வந்தன: யானைக்கோடு, பொன்மேனி, கொல்யானை, கருங்குதிரை, உவாப்பதினான்கு, பொற்றொடி என்பன. தொகாநிலை வகையான் வந்தன: சாத்தன் உண்டான், சாத்தனை வெட்டினான், உண்டான் சாத்தன், உண்டு வந்தான், நிலம் நீர் தீ வளி யாகாயம் என்பன. அவற்றுள் இது தொகைநிலை வகையான் வந்தது. தொகை தாம் பல: அவற்றுள் இஃதெத் தொகையான் வந்ததெனின் பண்புத் தொகையான் வந்த தென்க. மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர் பொருளென விசேடித்து நின்றமையின், உயர்வான மென்றாற்போல வினைத்தொகை யாகாதோவெனின், வினையின் றொகுதி காலத்தியலும் (எச். 18) என்றாராதலின் ஈண்டுக் காலம் தோன்றாமையின் ஆகா தென்க. எற்றுக்கு? உயர்ந்த மக்கள், உயராநின்ற மக்கள், உயருமக்களென நல்வினை யேதுவாக மூன்று காலமும் கொண்டாலாகுமே யெனின், அவ்வாறு கருதுவார்க்கு வினைத்தொகையுமாம்.
உயர் பொருள் என்னாது திணையென்றது என்னை யெனின், அவ்வாறு ஆடல் வேண்டி ஆசிரியன் இட்டதோர் குறி யென்று கொள்க.
என்மனார் என என்ப வென்னும் முற்றுச்சொல் திரிந்து நின்றது. குறைக்கும்வழிக் குறைத்தல் என்பதனான் பகாரம் குறைத்து, விரிக்கும் வழி விரித்தல் என்பதனான் மன்னும் ஆருமென இரண்டிடைச் சொற் பெய்து என்மனார் என்றாயிற்று எனப் பொருளுரைப்பவாலெனின், 1பகரங்குறைக்கின்றது செய்யுளின்பம் வேண்டியன்றே ஆண்டுக்குறைத்த வழிப் பின்னும் இரண்டெழுத்து விரிக்கல் வேண்டுமாயிற் குறைத்ததனாற் பயனின்மையின் இவ்வாறு எழுதும் உரை குற்றமென்க. இஃது எதிர்காலச் சொல்லாயினும் இறந்தகாலம் குறித்து நின்றது, இறப்பும் எதிர்வும் மயங்கப் பெறுமாகலின். அஃது ஆசிரியரென்னும் பெயர்கொண்டு முடியும். ஈண்டு அப்பெயர் எஞ்சி நின்றது.
மக்களென்னாது சுட்டென்ற தென்னையெனின், மக்களாவார் ஒரு நீர்மைய ரன்றி, ஆணும் பெண்ணும் அலியுமாகிய வடிவு வேற்றுமையுடையராகலின், அவரெல்லார்மாட்டும் பொதுவாகக் கிடக்கும் மக்கட்டன்மையைக் குறித்து மக்களிவ ரென்னும் பொதுப்பொருண்மை உயர்திணையாவதென்பதறிவித்தற்குச் சுட்டென்றார்.
அவரல்லாத அஃறிணை யென்னாது, பிறவென்ற தென்னையெனின், மக்களல்லாதவென்றவழி, உயிருடையனவற்றையே சுட்டுமென் றையுற்று உயிரில் பொருளும் அஃறிணை என்ப தறிவித்தற்குப் பிறவென்றார்.
இசைக்குமன வென்பது செய்ம்மனவென்னும் தொழிற்பெயர். அது செய்யுமனவென விரிந்து நின்றது. அது சொல்லென்னும் பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது.
இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடை யுள்ளுறுத் துரைப்பிற்பெருகும். (1)
1. இளம்பூரணம். இறையனாரகப் பொருளுரை. சூ, 1.