ஆகுபெயர்க்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்திற்று எனினும் அமையும்.
ஆகுபெயர் என்பது யாதோ எனின், யாதானும் ஒரு பொருத்தத்தினால் ஒன்றன்பெயர் ஒன்றதாகி வருவது.
இ - ள். முதலிற் கூறும் சினையறி கிளவி முதலாக எண்ணப்பட்டனவும், வினைமுதல் உரைக்குங் கிளவியொடு கூட அத்தன்மையவாகிய மரபினையுடையவும் ஆகுபெயர்ச் சொல்லாம் எ - று.
மரபினவும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஏகாரம் எண்ணும் குறித்து நின்றது. ஆம் என்பது எஞ்சி நின்றது.
எ - டு. ‘முதலிற் கூறும் சினையறி கிளவி’ என்பது சினைப்பொருளை முதலாற் கூறும் பெயர்ச்சொல்; கடு என்பது, கடுவினது காயைக் கடு என வழங்குதலின் ஆகுபெயராயிற்று.
‘சினையிற்கூறும் முதலறி கிளவியாவது’ முதற்பொருளைச் சினையாற் கூறும் பெயர்ச்சொல்; பூ நட்டார் என்பது, நடப்படுவது பூவினது முதலாதலின், அம்முதலைப் பூ என்று வழங்குதலின் ஆகுபெயராயிற்று. நகையச் சாக நல்லமிர்து கலந்த-நடுநிலை திறம்பிய நயமிலொருகை. (பரி. பக்கம். 16) ஏந்திள வனமுலை இறைநெறித்ததூஉம் (மணி. 18-69) என்பனவும் அவை.
“பிறந்த வழிக் கூறலென்பது” இடத்து நிகழ் பொருளை இடத்தாற் கூறுதல்; வேளார்காணி என்பது, வேளார்காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரான் வழங்குதலின் ஆகுபெயராயிற்று, யாழ்கேட்டான் என்பதும் அது: யாழிற் பிறந்த இசையையும் யாழ் என்றமையால்.
“பண்பு கொள் பெயராவது” பண்பின் பெயரால் பண்புடையதனைக் கூறல்; நீலம் என்றவழி அந்நிறத்தை உடைய மணியை நீலம் என்பதாக வழங்குதலின் ஆகுபெயராயிற்று.
“இயன்றது மொழிதலாவது” இயன்றதனான் மொழிதல் என விரியும். அது காரியப் பொருளைக் காரணத்தான் மொழிதல். பொன் பூண்டான் என்றவழிப் பொன்னினான் ஆகிய அணிகலத்தைப் பொன் என்று வழங்குதலின் ஆகுபெயராயிற்று. தன் மெய் காட்டி இஃதோர் அம்பு. இஃதோர் வேல் என்றவழி அவை பட்ட வடுவை அவற்றிற்குக் காரணமாகிய கருவிப்பெயரான் வழங்குவனவும் அமையும். இன்னும் இயன்றது மொழிதல் என்பதன்கண் இரண்டாவதை விரித்து இயன்றதனை மொழிதல் எனவாம்; அது காரணப்பொருளைக் காரியத்தாற் கூறுதல். நெல்லாதல், காணமாதல் ஒருவன் கொடுப்பக் கொண்டவன். இற்றைக்குச் சோறு பெற்றேன் என்னும்: அவ்வழிச் சோற்றுக்குக் காரணமாகிய நெல்லுங். காணமும் சோறு என ஆகுபெயராயின.
“இருபெயரொட்டு” என்பது இரண்டு பெயர் தொக்கு ஒரு சொன்னீர்மைப் பட்டு மற்றொரு பொருட்குப் பெயராகி வருவது. அது துடியிடை என்பது, துடிபோன்ற இடையினை உடையாளைத் துடியிடை என்பவாகலின் ஆகுபெயராயிற்று, இஃது உவமத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யன்றோ எனின். ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பொருளோடு ஒற்றுமைப் பட்டு வரும். அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வரும். அன்னதாதல் அன்மொழி என்றதனாலும் விளங்கும். அதனானேயன்றே பண்பு தொகவரூஉங் கிளவியானும்-உம்மை தொக்க பெயர் வயினானும் வேற்றுமை தொக்க பெயர்வயினானும் ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே 2என ஓதுவாராயிற்று.
“வினைமுத லுரைக்குங் கிளவி” என்பது - வினையும் முதலும் உரைக்குங் கிளவி என உம்மைத் தொகையாகக் கொள்ளப்படும்.
கொள்ளவே, வினையால் உரைக்குங் கிளவியும், வினைமுதலான் உரைக்குங் கிளவியும் ஆகுபெயராம் என்றவாறாம். வினையான் உரைக்கப்பட்டன;-- எழுத்து, சொல் என்பன எழுதப்பட்டதனையும், சொல்லப்பட்டதனையும் அப் பெயரான் வழங்குதலின், ஆகுபெயராயின. என் காவலிலே கட்டான் என்பதும் அது. வினைமுதலான் உரைக்கப்பட்டன செய்தானாற் செயப்படு பொருட்குப் பெயராகி வருவன: சாலியனால் நெய்யப்பட்ட ஆடையைச் சாலியன் என்பது. தொல்காப்பியம் என்பதோ எனின், அஃது ஈறுதிரிந்து நின்று, அவனால் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது; காரணப் பெயராம்.
‘அனைமரபின’ என்றதனான் ஈண்டு ஓதப்பட்டனவற்றுள் அடையடுத்து வருவனவும் கொள்க. தாழ்குழல் என்றவழி அதனையுடையாட்குப் பெயராகி வருதலின் ஆகுபெயராயிற்று. இது வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோ வெனின். ஆண்டு எடுத்து ஓதாமையினானும், பொருள் ஒற்றுமைப்படுதலானும் ஆகாது என்க.
(30)
1. அனைமரபினவே’ என்பதும் பாடம். இளம்பூரணர் பாடம் இதுவே.
2. எச்சவியல்--21.