இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், விளிமரபு என்னும் பெயர்த்து. நிறுத்த முறையானே எழுவகை வேற்றுமையும், அவற்றது மயக்கமும் உணர்த்தி யதன்பின், எட்டாவதாகிய விளி இலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர்.
இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோ எனின்,
விளி இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். விளி என்று சொல்லப் படுவன தம்மை ஏற்கும் பெயரோடு விளங்கத் தோன்றும் இயற்கையினை யுடைய என்று சொல்லுவார், எ - று.
ஏனை வேற்றுமை போல உருபு பிரிந்து வாராது பெரும்பான்மையும் பெயரோடு ஒற்றுமைப்பட்டு வருமென்பதூஉம், ‘கொள்ளும் பெயரோடு’ என்றமையாற் கொள்ளாப் பெயரும் உளவென்பதூஉம் பெறுதும். விளி என்றதனான் இவ்வேற்றுமை விளித்தற் பொருண்மைக்கண் வரும் என்று கொள்க.
(1)