ஒருமை சுட்டிய பெயர்

179.ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே.

ஒருமை குறித்த பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஒருமையைக் குறித்த எல்லாப் பெயரும் அஃறிணை ஒருமைக்கும், உயர்திணை ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ - று.

எ - டு. கோதை வந்தது, கையிழந்தது, செவியிலி வந்தது என அஃறிணை ஒருமை உணர்த்தின. கோதை வந்தாள், கையிழந்தாள், செவியிலி வந்தாள் என உயர்திணைப் பெண்பாலாயின. கோதை வந்தான். கையிழந்தான். செவியிலி வந்தான் என உயர்திணை ஆண்பால் உணர்த்தின. கையிழந்தன என அஃறிணைப் பன்மையும் உணர்த்துமாலெனின், அவ்வாறு வருவன சினை வினையுங் காட்டும். திரிபின்றி வரும் உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க.

(29)