உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று

199.அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.

உயர்திணைப் படர்க்கை வினையுள் ஒருமை வினை
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அன் முதலாக ஓதப்பட்ட நான்கும் உயர்திணை ஒருமை உணரவரும் படர்க்கைச் சொல்லாம், எ - று.

எ - டு. உண்டனன், உண்கின்றனன், உண்பன்; உண்டான், உண்ணாநின்றான், உண்பான்; உண்ணான் இவை ஆண்பால் உணர வந்தன, உண்டனள், உண்கின்றனள், உண்பள்; உண்டாள், உண்கின்றாள், உண்பாள்; உண்ணாள் இவை பெண்பால் உணரவந்தன. பிறவும் அன்ன

(8)