உம் என்னும் இடைச்சொல்லின் பொருள்

252.எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்(று)
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே.

இதுவும் அது.

இ - ள். எச்ச முதலாகச் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளும் உணர வரும்: உம்மைச் சொல், எ - று.

எ - டு. எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும், என இருவகைப்படும். சாத்தனும் வந்தான் என்றவழி, முன்னொருவன் வரவு குறித்தானாயின் இறந்தது தழீஇயதாம். பின்னொருவன் வரவு குறித்தானாயின் எதிரது தழீஇயதாம். ஏனையொழிந்த பொருளைக் குறித்தமையின் எச்சமாயிற்று.

சிறப்பு என்பது மிகுதி. அஃது உயர்பான் மிகுதலும், இழிபான் மிகுதலும் என இருவகைப்படும். 1அக்காரம், யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமே, தேவரே தின்னினும் வேம்பு என்றவழி, யாவர் என்றது இழிபு குறித்து நின்றது. தேவர் என்பது உயர்வுகுறித்து நின்றது.

ஐயம் என்பது ஐயப்பட்ட பொருண்மை குறித்து வருவது. ஏனல்காவ லிவளு மல்லள், மான்வழி வருகுந னிவனு மல்லன். நரந்தங் கண்ணி யிவனோ டிவளிடை கரந்த வுள்ளமொடு என்றவழிக், காரணம் பிறிதாகல் வேண்டும் என்னும் ஐயங் குறித்து நின்றது.

எதிர்மறையாவது யாதானும் ஒரு தொழிலை எதிர்மறுத்த தொழிற் கண்வரும். சாத்தன் வருதற்கு முரியன் என்றவழி, வாராமைக்கும் உரியன் எனவரும்.

முற்றென்பது மற்றொரு பொருளை நோக்காது நிற்கும். தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் எனவரும். முழுதும் உணர்ந்தார் என்பதும் அது.

எண் என்பது பலபொருளை எண்ணுதல் குறித்து வரும். 2மண்டிணிந்த நிலனும், நில னேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும் எனவரும்.

தெரிநிலை என்பது ஒரு பொருளை ஐயப்படுதலும் துணிதலும் இன்றி, ஆராயும் நிலைமைக்கண் வரும். 3ஐதேய்ந் தன்று பிறையுமன்று, மைதீர்ந் தன்று மதியு மன்று எனவரும்.

ஆக்கம் உம்மையடுத்த சொற்பொருண்மேல் ஆகும் நிலைமையைக் குறித்து வரும். வாழும் வாழ்வு, உண்ணுமூண் எனத் தொழிலினது ஆக்கங் குறித்து நின்றவாறு கண்டுகொள்க. இது பெயரெச்ச வினைச் சொலன்றோ எனின், ஆம். அதன்கண் உம் இடைச்சொல் என்க. அதனானே யன்றே 4உம் முந்தாகு மிடனுமா ருண்டே என்னும் இலக்கணத்தால், 5நெல் லரியுமிருந் தொழுவர் என்னும் பாட்டினுள், செஞ்ஞாயிற்று வெயின் முனையிற், றெண்கடற் றிரைமிசைப் பாயும் எனற்பாலது பாயுந்து என வந்தது. இவ்விலக்கணம் வினையியலுள் ஓதாமையால் பெயரெச்ச உம் இடைச்சொல் என்று கொள்ளப்படும். பாயும் புனல் என்பது பாய்புனல் எனத் தொக்குழி, வேற்றுமைப் பொருட்கண் உருபு, பெயர் நிற்பத் தொக்கவாறு போல, வினை நிற்ப உருபு தொகுதலானும், செய்யும் என்பது வினையும் உருபுமாகிய இரு நிலைமைத்து என்று கொள்க. செய்யும் என்னும் முற்றுச் சொல்லின்கண் உம் எவ்வாறு வந்த தெனின், அது மற்றொரு பொருளைக் குறித்து நில்லாமையின் ஈண்டு இடமின்றென்க. முற்றி நிற்றலின் முற்றும்மை எனினும் இழுக்காது.

ஆக்கவும்மை என்பதற்கு நெடியனும் வலியனும் ஆயினான் என உதாரணங் காட்டுபவாலெனின், அஃது எண்ணும்மை என்க. தனிவரின் எச்சவும்மையாம்.

(7)


1. நாலடி. 112.

2. புறம். 2.

3. கலி. 55.

4. இடை, சூ. 43.

5. புறம். 24.