இதுவும் அது. இ - ள். வினை முதலாகப் பெயரீறாகச் சொல்லப்பட்ட ஆறு சொல்லினையும் குறித்த நிலைமைத்து: என என்னுஞ் சொல், எ - று. எ - டு. கொள்ளெனக் கொடுத்தான் என்பது வினைகுறித்து நின்றது. 2பொள்ளென வாங்கே புறம் வேரார் என்பது விரைவு என்னுங் குறிப்பு உணர நின்றது. 3கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின் என்பது இசைப்பொருண்மை குறித்து நின்றது. 4கன் முகை யருவி தண்ணெனப் பருகி என்பது பண்புகுறித்து நின்றது. பாழெனக், காலெனப், பாகென, ஒன்றென, இரண்டென என்பது எண்ணுக்குறித்து நின்றது. 5நாளென ஒன்றுபோற் காட்டி என்றவழிப், பெயர்குறித்து நின்றது. எழுத்ததிகாரத்துள் 6என என்னெச்சமென ஓதுதலான் இவை யெல்லாம் வினையெச்சப் பொருண்மை யுணரவும், பெயரெச்சப் பொருண்மை யுணரவும் வரும் என்று கொள்க. ஊரெனப்படுவது உறையூர் எனச் சிறப்புப் பற்றியும் வருமாலெனின், அது பெயர்ப் பொருளின் பாகுபாடாதலிற் பெயரென அடங்கும். (10)
1. அவ்வாறு ‘கிளவியும்’ என்பதும் பாடம். 2. குறள். 487. 3. கலி. 5. 4. புறம். 150. 5. குறள், 334. 6. சூ. 204.
|