இதுவும் அசைநிலைச்சொல் பொருள் படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அம்ம என்னும் சொல் அசைநிலை யாகலேயன்றிக் கேள் என்னும் பொருளும் படும், எ - று. எ - டு. ‘அம்ம வாழி தோழி’ (ஐங்-31) என்றவழிக் கேள் என்னும் பொருள் குறித்து நின்றது. ‘உண்டா லம்மவிவ் வுலகம்’ (புறம்-182.) என்பது அசைநிலையாகி வந்தது. அசை நிலை என்பது எற்றாற் பெறுது மெனின், மேல் “அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்” (விளிமரபு-35) என்பதனாற் பெறுதும். (27)
|