வினைச்சொற்கள் இடம்பற்றி வரும் மரபு

28.

1செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னும்
அம்மூ விடத்தும் உரிய வென்ப
அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த
ஏனை யிரண்டும் ஏனை யிடத்த.

ஒருசார் 2வினைச்சொற்கண் இடவழுக்காத்தலை நுதலிற்று.

இ - ள். செலவு, வரவு, தரவு, கொடை யென்னும் தொழிற் கண் நிலைபெறத்தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கையென்னும் அம்மூன்றிடத்தும் உரியவென்ப ஒருசாரார். அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிருகிளவியும் தன்மை முன்னிலை யென்னும் இரண்டிடத்தினும் வரும்; ஏனையிரண்டும் படர்க் கைக்கண் வரும், எ - று.

எ - டு. எனக்குத் தந்தது; எனக்கு வந்தது; நினக்குத் தந்தது; நினக்கு வந்தது; அவர்க்குச் சென்றது; அவர்க்குக் கொடுத்தது எனவரும்.

இந்நான்கு சொல்லும் மூன்றிடத்தும் வரும் என்பார் உதாரணங்காட்டுமாறு:--எனக்குச் சென்றது; எனக்குக் கொடுத்தது; நினக்குச் சென்றது; நினக்குக் கொடுத்தது; அவர்க்குத் தந்தது; அவர்க்கு வந்தது எனக் காட்டுவர்.

இவற்றுள் கொடுவென்பதனை ‘கொடுவென் கிளவி படர்க்கை யாயினும் - தன்னைப் பிறன்போற்கூறுங்குறிப்பில் - தன்னிடத் தியலும் என்மனார் புலவர்’ (எச்-49) என எடுத்து வழுவமைக்கின்றார் ஆகலானும், பிறவும் இத்துணைச் சிறப்பில வாதலானும் இலக்கண வழக்கு மேற்காட்டப்பட்ட ஆறுதாரணமுமே. ஏனைய ஆறும் ஒருமுகத்தான் வழுவமைத்தவாறாகக் கொள்க.

(28)


1. இச்சூத்திரத்தினை இளம்பூரணர் முதலியோர் முச்சூத்திரங்களாகக் கொள்வர்.

2. வினைச்சொற்கு இலக்கணம் உணர்த்தலை. (இ. ஏ.)