பே, நாம், உரும் என்பவற்றின் பொருள்

361.

பேஎ நாம் உருமென வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.

இ - ள். பேஎ என்னுஞ் சொல்லும், நாம் என்னுஞ் சொல்லும், உரும் என்னுஞ் சொல்லுமாகிய அம்முறைமையையுடைய மூன்று சொல்லும் அச்சப் பொருண்மையை உடைய, எ - று.

எ - டு. மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் (குறுந்-87). 1நாம நல்லராக் கதுவியாங்கு. உருமில் சுற்றமோ டிருந்தோற் குறுகி (பெரும்-447).

(69)


1. நாம நல்லார் எனப் பல உரைகளுள்ளும் காணப்படும் இதனைப் பண்டிதர் திரு. அ.கோபாலையரவர்கள் கூர்ந்து ஆய்ந்து, ‘நாம நல்லரா’ என விருத்தல் வேண்டும் என்றனர். இது சாலவும் பொருத்தமுடையதே என்பது கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பிலுள்ள அடிக் குறிப்பாகும்.