அப்பொருளுணர்ச்சியும் உணர்வார்க்கே இயலும் எனல்

392.அன்ன பிறவும் கிளந்த வல்ல
பன்முறை யானும் பரந்தன வரூஉம்
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட
இயன்ற மருங்கின் இனைத்தென அறியும்
வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்
தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற்
பாங்குற உணர்தல் என்மனார் புலவர்.

இஃது உரிச்சொற் கெல்லாம் புறனடை யுணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். ‘அன்னபிறவும்.....................எல்லாம்’ என்பது ஈண்டு எடுத்து ஓதப்பட்டனவல்லாத அத்தன்மைய பிறவுமாகிப் பல்லாற்றானும் பரந்துவரும் உரிச்சொல் எல்லாம், எ-று.

‘பொருட்குறை.............இன்மையின்’ என்பது பொருட் குறை படாமற் கூட்ட வழக்கியன்ற மருங்கின் இத்துணையென வரையறுக்கு நிலைமை தமக்கு இல்லையாகலான், எ-று, இதனானே எடுத்தோதல் அரிதாயிற்று.

‘வழிநனி கடைப்பிடித்து’ என்பது சான்றோர் செய்யுட்கண் வந்த நெறியை மிகவுங் கடைப்பிடித்து, எ-று.

‘ஓம்படை ஆணையில்’ என்பது--ஓம்படை என்பது பாதுகாவல். ஆணை என்பது விதி; பாதுகாத்தலாக எடுத்தோதப்பட்ட புறனடைச் சூத்திரவிதியினால், எ - று. அஃதாவது ‘முன்னும் பின்னும் வருபவை நாடி, ஒத்த மொழியாற் புணர்த்தல்’ என மேற் கூறப்பட்டது.

‘கிளந்தவற்றியலான்’ என்பது பொருளுணர்த்துதற்குக் கருவியாகக் கூறப்பட்ட சொல்லானும்., குறிப்பானும், பண்பானும், எ-று.

‘பாங்குற உணர்தல் என்மனார் புலவர்’ என்பது பாங்குபட அறிக என்று சொல்லுவர் புலவர், எ-று.

இதன்பொழிப்பு;--எடுத்தோதப்படாத உரிச்சொல்லெல்லாம் ஈண்டுப் பொருட்குறைபடாமல் எடுத்தோதக் கருதின், அவை எல்லையிலவாதலான், அவை செய்யுளகத்து வழங்கிய நெறியைக் கடைப்பிடித்து, நாம் அதிகாரப் புறனடையாகச் சொன்ன ‘முன்னும் பின்னும் வருபவை நாடி, ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்’ என்னும் விதியினாலும் குறிப்பானும் பண்பானும் பொருள்படுமாறு அறிந்துகொள்க. எ-று.

“கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை” என்றவழிக், கஞலென்பது நெருக்கம் குறித்து நின்றது. 1’ஒல்லும் வகையான் அறவினையோவாதே’ என்றவழி, ஒல்லென்பது செய்யப்படும் என்பது குறித்து நின்றது. ’மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்’ 2என்றவழி, மன்னென்பது நிலைபெறுதல் குறித்து நின்றது. “இரும்பிடித் தொழுதியொடு பெரும் கயம்படியா”3 என்றவழி, இருமை யென்பது பெருமை குறித்து நின்றது. ‘அஞ்செங்குவளைக் கண்போலாயிதழ்’ என்றவழி அம் என்பது அழகு குறித்து நின்றது. “வானமூர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவி ரங்காட்டு”.4 என்றவழி, வயங்கென்பதூஉம், அவிரென்பதூஉம் விளக்கங் குறித்தன. அம்மென்பது நுணுக்கங் குறித்தது. உருப்பென்பது வெம்மை குறித்தது. 5’ஊரவர் கவ்வை எருவாக’ என்றவழி, கவ்வை யென்பது அலர் குறித்து நின்றது. 6‘பொருளானாமெல்லா மென்றீயா திவறும்’ என்றவழி, இவறென்பது லோபம் குறித்தது. “பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர் போல்’ என்ற வழிப் பீடென்றது பெருமை குறித்து நின்றது. ‘நொறிலியற் புரவியதிபர் கோமான்’ என்றவழி, நொறில் என்பது நுடக்கத்தின்கண் வந்தது. ‘நொறிலியற் புரவி கழற்காலிளையோன்’என்றவழி’ நொறிலென்பது விரைவின்கண் வந்தது. ‘கவரிமான் கணம் கல்லறை தெவிட்ட’ என்ற வழித், தெவிட்ட என்பது அடையவென்பது குறித்து நின்றது. ‘களிறு வழங்கதர் கானத்தல்கி’7 என்றவழி. அல்குதல் தங்குதற்கண் வந்தது. ‘நெடும் பெருங் குன்றத் தமன்ற காந்தள்’8 என்றவழி, அமல்தல் நெருங்குதற்கண் வந்தது. ‘மலைநாறிய வியன்ஞாலத்து’ (மது-4) என்றவழி, நாற்றம் என்பது தோற்றங் குறித்து நின்றது. ‘நாற்ற நாட்டத் தறுகாற் பறவை’9 என்றவழி, நாடுதல் ஆராய்தற்கண் வந்தது. ‘தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவும் உளவன்றோ’ (கலி-25) என்றவழித், தணத்தல் நீக்கங் குறித்து நின்றது. ‘குரலோர்த் தொடுத்த சுகிர்புரி நரம்பின், அரலை திரிவுறீஇய’10 என்றவழி; அரலை குற்றங் குறித்தது. ‘மாக்கடல் நிவந்தெழு செஞ்ஞாயிற்றுக்கவினை’ (புறம்-4) என்றவழி நிவப்பென்பது ஓக்கங்குறித்தது. மாகந்திவளடி வருநீள்கொடி மாடவீதி என்றவழி, திவள்தலென்பது தீண்டுதல் குறித்தது இவர்தலென்பது பரத்தல் குறித்தது. ‘வாயாச் செத்தோய் என வாங்கே யெடுத்தனன்’ என்றவழிச் செத்தென்பது குறிப்புணர்த்திற்று. பிறவுமன்ன.

(100)

உரியியல் முற்றும்.


1. குறள்-33.

2. புறம்-165.

3. புறம்-44.

4. அகம்-11.

5. குறள்-1147.

6. குறள்-1002.

7. பொரு-49.

8. அகம்-4.

9. புறம்-70.

10. மலைபடு-23-24.