மேற்சொல்லப்பட்ட நால்வகைச் சொல்லும் செய்யுளகத்து விகாரப்படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அந்நாற்சொல்லும் ஆவன:--இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லும், எ - று. தொடுக்குங் காலை யென்பது ஒன்றோடொன்று தொடர்புபடச் செய்யுளாக்குங் காலத்து. எ - று. வலிக்கும்வழி வலித்த லென்பது மெல்லெழுத்தினை வல்லெழுத்தாகத் தொடுக்கவேண்டும்வழி வல்லெழுத்தாகத் தொடுத்தல். மெலிக்கும்வழிமெலித்தல் என்பது வல்லெழுத்தினை மெல்லெழுத்தாகத் தொடுக்க வேண்டும்வழி மெல்லெழுத்தாகத் தொடுத்தல். விரிக்கும்வழி விரித்தல் என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின்மேல் ஒன்றும் இரண்டும் எழுத்து விரிக்கவேண்டும் வழி விரித்துத் தொடுத்தல். தொகுக்கும் வழித் தொகுத்தல் என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின்கண் ஒன்றும் இரண்டும் எழுத்துத் தொகுத்துத் தொடுக்கவேண்டும் வழித் தொகுத்துத் தொடுத்தல். நீட்டும் வழி நீட்டலென்பது குற்றெழுத்தாகி நின்று பொருள் படுஞ் சொல்லை நெட்டெழுத்தாகத் தொடுக்கவேண்டும்வழி நெட்டெழுத்தாகத் தொடுத்தல், குறுக்கும் வழிக் குறுக்கலாவது நெட்டெழுத்தாகி நின்று பொருள்படுஞ் சொற்களைக் குற்றெழுத்தாகத் தொடுக்கவேண்டும் வழிக் குற்றெழுத்தாகத் தொடுத்தல். நாட்டல் வலிய என்மனார் புலவர் என்பது இவ்வாறாகச் செய்யுட் கண் வைத்தல் வலியுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர், எ - று, குற்றமில, எ - று.விகாரப்படாமற் றொடுத்தல் சொல்லாமல் முடிந்ததாம். எ - டு.“தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலந் தோன்றின் ஒத்த தென்ப ஏயென் சாரியை’ (எழுத்-164.)என்றவழி, முந்தை என்பது முத்தையென வல்லெழுத்தாயிற்று. “தண்டை யினக்கிளி கடிவோள்” என்பதனுள் தட்டை எனற்பாலது தண்டையென மெல்லெழுத்தாயிற்று. 1”தண்ணந்துறைவர் தகவிலர்” என்றவழித், தண் என்பது தண்ணம் என விரிந்து நின்றது. 2“வேண்டார் வணக்கி விறல்மதிறான் கோடல்” என்றவழி, வேண்டாதாரை யென்பது வேண்டார் எனத் தொக்கு நின்றது. தொகுத்தலென்பது சுருக்குதல். அஃதேல், அத் தா என்பது இவ்விலக்கணத்தால் தொகுக. ஐ என்பது “உருபு தொக வருதல்” என்புழி அடங்காதோ எனின், ஐகாரம்3 “உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்” என ஓதப்படுதலின், அஃது உயர்திணைக்கண் தொகாது நிற்கவேண்டும். ஆயினும், செய்யுளின்பம் வேண்டித் தொகப்பெறு மென்பது இவ்விலக்கணத்தாற் கொள்ளப்படும். “பாசிழையாகம் பசப்பித்தான்” என்றவழி, பச்சிழை எனற்பாலது பாசிழை என நீண்டு நின்றது. “திருத்தார் நன்றென்றேன் தியேன்” இதனுள், தீயேன் என்பது தியேன் எனக் குறுகி நின்றது. அந்நாற் சொல்லும் இவ்வாறு விகாரப்படும் என்றமையான், ஒரு மொழிக்கண்ணே இவை வருவன உணர்க. (7)
1,2. மயிலை நா-பக்கம் 79. காண்க. 3. எழுத் - 157.
|