நிரனிறைப் பொருள்கோள்

401.அவற்றுள்.
நிரனிறை தானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச்
சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல்.

நிரனிறை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற்சொல்லப்பட்டவற்றுள், நிரனிறையாவது வினையானும், பெயரானும் ஆராயப் புலப்படுஞ் சொற்களைச் சேர நிறுத்தி, அவற்றிற்கு முடிபாக வருஞ் சொற்களைச் சேர நிறுத்துதல், எ-று.

1“அடல்வே லமர் நோக்கி நின்முகங் கண்டே
உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும்
தடமதியம் ஆமென்று தாம்.”

என்பதனுள் உடலும், ஓடும், ஊழ்மலரும், பார்க்கும் என்னும் வினை-கடல், இருள், ஆம்பல், பாம்பு என்பனவற்றோடு கடல் உடலும், இருளோடும், ஆம்பல் மலரும், பாம்பு பார்க்கும் என அடைவே முடிந்தவாறு கண்டுகொள்க.

“கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி” என்றவழி, கொடி, குவளை, கொட்டை என்னும் பெயர் நுசுப்பு. உண்கண், மேனி என்னும் பெயரோடு கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என அடைவே முடிந்தவாறு காண்க.

வினையும் வினையுமாக வருவன உளவேல், வந்தவழிக் கண்டுகொள்க.2

நினையத்தோன்றி என்றமையால் பொருள் விளங்க நில்லாது. நினைத்தாற் றோன்றுமாறாக மயங்கி வருவனவுங் கொள்க. ‘களிறுங் கந்தும்போல நளிகடற், கூம்புங் கலனுந் தோன்றும்’ (மயிலை-பக்கம்-282) என்றவழி, களிற்றிற்குக் கூம்பும், கந்திற்குக் கலனும் உவமை யன்மையின், களிறு போலுங் கலம், கந்து போலுங் கூம்பு எனவும் மயங்கி வந்தவாறு கண்டு கொள்க.

(9)


1. ‘உடலு மிருந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
   
  கடலிரு ளாம்பல்பாம் பென்ற--கெடலருஞ்சீர்த்
   
 திங்கள் திருமுகமாச் செத்து.’
என்பது ஏனை உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள்.

2. ‘மாசு போகவும் காய்பசி நீங்கவும், கடிபுனல் மூழ்கி யடிசில் கை தொட்டு’ - வினை நிரனிறை என்பது சேனாவரையம்.