கிளைநுதற் பெயர்கள் பிரிப்பப் பிரியா எனல்

406.த ந நு எ எனும் அவைமுத லாகிய
கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா.

ஒட்டுப் பெயர்க்கு உரியதோர் மரபு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். த, ந, நு, எ என்னும் அவை முதலாகியவும், கிளைமை நுதலிய பெயரும் பொருள் நிலையாற் பிரிக்க நினைக்கின் பிரிந்து பொருள்படா. ஒட்டி நின்றே பொருள்படும், எ - று. ஆகியும் என்னும் உம்மை தொக்கு நின்றது.

த, ந, நு, எ, என்னும் அவை முதலாகியவாவன:--தான், தாம், நாம், யாம், யான், நீ, நீர், நீயிர், என மூன்றிடத்துப் பெயர்களும் ஆறாம்வேற்றுமைக் கிழமைப் பொருள் குறித்து, முன்னிலை குறுகியும் திரிந்தும் வந்து, கிழமைப் பொருளுணர்த்துஞ் சொல்லின் ஈற்றெழுத்தோடு ஒட்டி நின்று தமன், தமள், தமர், தமது, தம எனப் படர்க்கையினும்; நுமன், நுமள், நுமர், நுமது, நும என முன்னிலையினும்; நமன், நமள், நமர், நமது, நம: எமன், எமள், எமர், எமது, எம எனத் தன்மையினும் வரும். கிளை நுதற் பெயராவன:--இம்மூன்றிடத்தும் ஒட்டுப்பட்ட பெயர்கள், ஆறாம் வேற்றுமை முறைமையைக் குறித்து மேற்சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும்; தாய், ஞாய், யாய் எனவும், தம்முன், நும்முன். எம்முன் எனவும்; தம்பி, நும்பி, எம்பி எனவும்; முதல்வனையும், ஈன்றாளையும், முன் பிறந்தானையும், பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்களெல்லாம் பொருள்முகத்தாற் றம்மையும் பிறரையும் உணர்த்துவன இச்சொற்களெல்லாம் ஏனையபோலப் பிரிக்கப்படா: ஒட்டி நின்றே பொருள்படும். எ - று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், காரணப் பெயராகிவரும் தொழில்பெயரும், உடைய பெயரும், பண்புப்பெயர் முதலாயினவும் பிரிப்பப் பிரியாவென்று கொள்க. பிறன், பிறள், பிறர் என்பவோவெனின், அவை ஒட்டுப்பெயரல்ல என்க.

(14)