இது வினைச்சொற்கண் வருவதோர் வழுவமைதி
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தான் வந்தில எனக்கடியப்படா: அவ் வினைச்சொற்கள் காலத்தொடு பொருந்தின், எ - று.
காலமாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம். காலப் பொருண்மை மயங்காமல் வரின், ஈறு திரியினும் அமைக என்றவாறு.
எ - டு. “மறம்பாடிய பாடினியும்மே, பேருடைய விழுக்கழஞ்சிற், சீருடைய விழைபெற் றிசினே. இழைபெற்ற பாடினிக்குக், குரல்புணர்சீர் கொளைவல்பாண்மக னும்மே. எனவாங்கு, ஒள்ளழற் புரந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.” (புறம்.11.) என்பதனுட் படர்க்கை வினைச்சொல் ஈறுதிரிந்து நின்றது காலப்பொருண்மை வழுவாமையின், குற்றமின்றாயிற்று.
1“ஆரமரலறத் தாக்கித் தேரோ, டவர்ப்புறங் காணேனாயிற் சிறந்த, பேரம ருண்க ணிவளினும் பிரிக” எனவும், 2“முறை திரிந்து, மெலிகோல் செய்தே னாகுக” எனவும் தன்மைக்கண் எதிர்காலங் குறித்த வஞ்சினம் வியங்கோள் வாய்பாட்டால் வந்தன.
3“பகலே பலருங் காண நாண்விட், டகல்வயற் படப்பை யவரூர் வினவிச், சென்மோ வாழி தோழி பன்னாட், கருவிவானம் பெய்யாதாயினும், அருவி யார்க்கும் கழைபயி னனந்தலை, வான்றோய் மாமலைக் கிழவனைச், சான்றோ யல்லை யென்றனம் வரற்கே” என்றவழிச் செல்வேமோ எனற்பாலது சென்மோ என வந்தது. பிறவுமன்ன.
இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றாற் பொருளுரைப்பவாலெனின், வினைச் சொற்றிரிபு அதிகாரப்பட்டு வருதலானும், காலத்துப்படினே என்றமை யானும் பிறவாற்றானுரைப்பது பொருளன்றென்க.
(50)
1, 2. புறம்-71.
3. நற்-365-காண்க.