திணைவிரவிய பெயர்கள் முடியுமாறு

49.

பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே.

திணைவழுவமைத்தலை நுதலிற்று.

இ - ள். எண்ணிக்கண், திணை விரவிவரும் பெயர், பெரும் பான்மையும் அஃறிணை முடிபின செய்யுளுள், எ - று.

எனவே, சிறுபான்மை உயர்திணையான் முடியவும் பெறுமென்று கொள்க.

எ - டு.

‘கோலஞ்சி வாழும் குடியுங் குடிதிழீ இ
ஆலம்வீழ்
1 போலும் அமைச்சனும்-வேலின்
கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்,’

(திரி. 33)

இது விரவி எண்ணி அஃறிணையான் முடிந்தது.

‘அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்’

(நாலடி. 151)

எனவும்,

‘பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்கு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி எனப்படு வார்.’

(ஆசாரக்கோவை. 64)

எனவும், இவை உயர்திணையான் முடிந்தன.

யானையுங் குதிரையும் வீரரும் போர்க்களத்துப்பட்டன; அரசனும்
படையும் பட்டன எனவும் வழக்கின்கண்ணும் வருமால் எனின், மொழிந்த பொருளோ டொன்றவைத்தல் என்னும் தந்திர உத்தியால்
2 இச்சூத்திரத்திற்குப் பலவயினானும் அஃறிணை முடிபின செய்யுளுள் என்றமையான், சிலவயினான வழக்கினுள்ளும் விரவி வந்து தலைமையும் பன்மையும் பற்றி வந்த அஃறிணையான் முடியவும் பெறுமென்று கொள்க.

(49)


1. ஆல்வீழ்து. (இ. ஏ.)

2. ஒப்பக்கூறல் என்னும் தந்திர உத்தியால் என்பதும் பாடம்.