ஆன், ஏது என இவ்விடத்து வரும் அத்தன்மைய பிற சொற்களும் மூன்றாம் வேற்றுமைப்பாலன, எ-று.அதனின் இயறலாவது:--இயலப்படுவதற்குக் காரணமாகிய பொருண்மேல் உதாரணவாய்பாட்டான் வந்தது. மண்ணினானியன்ற குடம், அரிசியானாகிய சோறு.
அதற்றகு கிளவியாவது:--அதனாற் றகுதியை யுடைத்தாயிற்றென்னும் பொருண்மை தோன்ற வருவது. கண்ணான் நல்லன், குணத்தான் நல்லன், நிறத்தான் நல்லன் என உறுப்பும், பண்பும்பற்றி வருவன.
அதன்வினைப் படுதலாவது:--ஒன்றன் றொழின்மேல் வருதல், புலி பாய்தலாற்பட்டான், ஓட்டாற்கடிது குதிரை என்பன.
அதனினாதலாவது:--ஆக்கத்திற்கு ஏதுவாகிவருவது வாணிகத்தினாயினான், எருப்பெய்து இளங்களை கட்டமையாற் பைங்கூழ் நல்லவாயின.
அதனிற் கோடலாவது:--ஒன்றனானே ஒன்றைக்கோடல், காணத்தாற் கொண்ட வரிசி.
அதனொடு மயங்கலாவது:--ஒன்றோடொன்று விரவிவருதல். பாலொடு கலந்த நீர்.
அதனொடு இயைந்த ஒருவினைக் கிளவியாவது:--ஒருவினையான் இரு பொருள் முடிவது. படையொடு வந்தான் அரசன்.
அதனொடு இயைந்த வேறு வினைக்கிளவியாவது:--வேறு வினையுடையன இரண்டு சொல் ஒரு வினையொடு தொடர்வது. காவோ டறக்குளந்தொட்டான்.
அதனோடு இயைந்த ஒப்பலொப்புரையாவது:--உவமை யின்றி யிதுவும் அதுவும் ஒக்குமென அளவினாலும் நிறையினாலும் எண்ணினாலும் வருவன, இதனோடு ஒக்கும் இது, இக்கூற்றோடொக்கும் இக்கூறு.
இன்னென்பது இன் என்னும் சொல், ஆனென்பது ஆன் என்னும் சொல், ஏது வென்பது ஏது என்னும் சொல்.
அன்ன பிறவாவன;--காரணம், நிமித்தம், துணை, மாறு என்பன. இவையும் மூன்றாம் வேற்றுமைப் பொருளுணர்த்து முருபுகளும் பொருளுணர்த்தும்சொற்களுமாம், எ-று. புகையுண்மையின் நெருப்புண்மையறிக புகையுண்மையான் நெருப்புண்மையறிக, புகை யேதுவாக நெருப்புண்மையறிக, புகை காரணமாக நெருப்புண்மையறிக, புகை நிமித்தமாக நெருப்புண்மையறிக, சுக்கிரீபன் துணையாக இலங்கை கொண்டான், “அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே”. (புறம். 20)