இதுவும் நான்காம் வேற்றுமைக்கண் வரும் பொருள் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பீறாகச் சொல்லப்பட்டவற்றின்கண் அப்பொருள்பட வருஞ் சொல்லும், உம்மையால் அந்நிகரன பிறபொருட்கண் வருஞ் சொல்லும் நான்காம் வேற்றுமைப்பாலன, எ - று. உம்மை எச்சவும்மை.
அதற்கு வினையுடைமையின் என்பது மேற்சொல்லப்பட்ட கொடைப் பொருண்மையே யன்றி உருபேற்கும் பொருட்கு வினையாதலுடைமை கூறும் வழியும் நான்காம் வேற்றுமைப் பாலனவாம், எ - று.
எ - டு. அவர்க்குப் போக்குண்டு, அவர்க்கு வரவுண்டு, இவை வினை. கரும்பிற்குழுதான் என்பதுமது.
அதற்கு உடம்படுதலென்பது உடம்பாடு கூறும் வழியும் நான்காவதாம், எ-று.
எ - டு. கொலைக்குடம்பட்டான்.
அதற்குப் படுபொருளாவது-உருபேற்கும் பொருட்கு இயல்பு கூறும் வழியும் நான்காவதாம். எ - று.
எ - டு. இதற்கு நிறங்கருமை; இதற்கு வடிவு வட்டம்; இதற்கு அளவு நெடுமை; இதற்குச் சுவை கார்ப்பு; இச் சொற்குப் பொருள் இது; இவ்வாடைக்கு விலை இது எனவும், இவ்வாறு வருவனவும் கொள்க. இன்னும் அதற்குப் படுபொருள் என்றதனான், உடைப்பொருளும் அவ்விடத்திற்கு ஆம்பொருளும், காலத்திற்கு ஆம்பொருளுமாகி வருவனவும் கொள்க. அவற்குச் சோறுண்டு. ஈழத்திற் கேற்றின பண்டம், காலத்திற்கு வைத்த விதை எனவரும்.
அதுவாகுகிளவி--ஒன்றொன்றாகத் திரிந்துவரும் பொருட்கு வருவது. கடிசூத்திரத்துக்குப் பொன், கும்மாயத்திற்குப் பயறு.
அதற்கியாப்புடைமையாவது--உருபேற்கும் பொருட்கு வலியாதலுடைமை.
‘யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கை’ |
(நாலடி. 28) |
என்றவழி வலியெனப் பொருளாயிற்று.
எ - டு. போர்க்கு வலி குதிரை; நினக்கு வலி வாள் எனவரும்.
அதற்பொருட்டாகலின் என்பது-ஒரு பொருட்காக வென்பது படவருதல்.
எ - டு. கூழிற்குக் குற்றேவல் செய்யும், கூலிக்கொலிக்கும்.
நட்பு - அவற்குத் துணை, அவற்கு நட்பு எனவரும், பகை - அவற்குப் பகை. காதல் - மகற்குக் காதலன், சிறப்பென்பது - இன்றியமையாமை பற்றிவரும்.
எ - டு. யாமுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயின் எனவும்,
“நிலத்திற் கணியென்ப நெல்லுங் கரும்பும்” |
(நான்மணிக். 9) |
எனவும் வரும்.
உம்மையாற் கொள்ளப்படுவன - இவ்வூர்க் கவ்வூர்க் காதம், நாளைக்கு வரும், இவர்க்குத் தகும் இது, இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன். பிறவும் இந்நிகரன வெல்லாம் கொள்க
(14)