நோக்கல் நோக்கப் பொருளில் மூன்றாவதும் ஐந்தாவதும்
மயங்கல்

90.

இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமவ்
விரண்டன் மருங்கின் ஏதுவு மாகும்.

இரண்டாவதனோடு மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இரண்டாம் வேற்றுமைக்கண் ஓதப்பட்ட நோக்கப் பொருண்மையின்கண் நோக்குதல் அல்லாத நோக்கம், மூன்றாவதினும் ஐந்தாவதினும் ஓதப்பட்ட ஏதுவினும் ஆம், எ - று.

‘அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை’

(திருக்குறள்-புறங்கூறாமை, 9).

என்றவழி அறத்தை நோக்கியென விரித்தலேயன்றி, அறத்தான் நோக்கி யாற்றுங்கொல், அறத்தின் நோக்கி யாற்றுங் கொல் என விரிப்பினும் ஆம் என்றவாறு. புன்சொல் உரைப்பானை நிலம் பொறுக்கின் பொறையாகிய தருமத்தைக் குறித்தோ, அத்தருமம் தனக்கியல்பாதலின் அஃதேதுவாகவோ என இருவாற்றானும் விரிப்பினும் அமைந்தவாறு கண்டுகொள்க.

(9)