ஓர் உருபு பல தொடர்ந்தடுக்கியவழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. ஒரு சொல் பல அடுக்கி வரும் வழி--பெயரடுக்கு, வேற்றுமையடுக்கு, முற்றுச்சொல் லடுக்கு, பெயரெச்ச அடுக்கு, வினையெச்ச அடுக்கு, இடைச்சொல்லடுக்கு, உரிச்சொல்லடுக்கு எனப் பலவகைப்படும். அவற்றுள், வேற்றுமை யடுக்காவது-ஓருருபு அடுக்கி வருதலும், பல உருபு அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவற்றுள் ஓருருபு அடுக்கி வருதல்--ஒரு பொருண்மேல் அடுக்கி வருதலும், பல பொருண்மேல் அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவ்விருவகையும் இச்சூத்திரத்தாற் கூறப்படும். இ - ள். உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைச் சொல் ஒரு சொல் நடையவாம், முடிக்கும் பொருண்மை செல்வுழி எ-று. ஓர் உருபு ஒரு வினையான் முடியாது, பல உருபு ஒரு வினையான் முடியும் என்றதனான் வழுவமைதி கூறியவாறாம். “தேம்பைந்தார் மாறனைத் தென்னர் பெருமானை வேந்தனை வேந்தர்மண் கொண்டானை--யாஞ்சிறிதும் எங்கோல் வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ! செங்கோல் சிறுமை யுற.” இதனுள் ஐகார உருபு பல அடுக்கி, ஒரு பொருட்கண் வந்து, வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ என்பதனோடு முடிந்தவாறு கண்டுகொள்க.. “கொல்லிப் பொருப்பனாற் கொங்கர் பெருமானால் வில்லிற் பகைகடிந்த வேந்தனால்--அல்லியந்தார்க் கோதையால் வையங் குளிர்தூங்க என்கொலோ! பேதையார் எய்துவது பேது.” இது மூன்றாவது அடுக்கி வந்து குளிர் தூங்க என்பதனோடு முடிந்தது. “வாராய்நீ புறமாறி வருந்திய மேனியாட்கு ஆரிருட் டுணையாகி யசைவளி யலைக்குமே கமழ்தண்டா துதிர்ந்துக வூழுற்ற கோடல்வீ யிதழ்சோருங் குலைபோல விறைநீவு வளையாட்கு” கலி. நெய். 4. இது நான்காவது அடுக்கிவந்து அலைக்கும் என்பதனோடு முடிந்தது. “வீரப் புலியனின் வெல்போர் வளவனிற் கோரப் பரியுறந்தைக் கோமானின்--ஆரலங்கல் மற்படுதோட் செம்பியனின் மல்லன் மணிநேரி வெற்பனிற் றீர்ந்துளவோ வேந்து”. இதனுள் ஐந்தாவது பலவடுக்கிவந்து தீர்ந்து என்பதனோடு முடிந்தது. “பெற்றி திரிந்து பெருவறங் கூறினும் மற்றுயிர்கள் நோயால் வருந்தினுங்--கொற்றக் குடையான்கண் நீதிபுரி கோலான்கண் ஆழிப் படையான்கண் நிற்கும் பழி.” இதனுள் ஏழாவது பலவடுக்கிவந்து நிற்கும் என்பதனோடு முடிந்தது. இவை ஒரு பொருண்மேல் ஓருருபு அடுக்கி வந்தன. உழவை, வாணிகத்தைச் செய்யும் எனவும்: சோற்றால், தண்ணீரால் வயிறு நிறைக்கும் எனவும்; அந்தணர்க்குச் சான்றோர்க்குக் கொடுக்கும் எனவும்; நிலத்தினும், வானினும் பெரிது எனவும்; நல்லாற்றது. தீயாற்றது என்னாது கொள்ளும் எனவும்; அரங்கிலே, அறையிலே நடிக்கும் எனவும் இவ்வாறு வருவன பல பெயர்க்கண் ஓருருபு வந்து ஒரு சொல்லான் முற்றுப்பெற்றன. “துணிநீராற் றூய்மதி நாளா லணிபெற ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும் ஆன்றவ ரடக்கம்போல் அலர்செல்லாச் சினையொடும் வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடும் நல்லவர் நுடக்கம்போல் நயம்வந்த கொம்பொடும் உணர்ந்தவர் ஈகைபோல் இணரூழ்த்த மரத்தொடும் புணர்ந்தவர் முயக்கம்போற் புரிவுற்ற கொடியொடும் நயந்தார்க்கோர் நல்லைமன் இளவேனில்.” (கலி. பாலை. 32) என்பதனுள் ஆலும், ஒடுவும் பல அடுக்கிவந்து நல்லை என்பதனோடு முடிந்தன. (18)
|