2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

இரண்டாம் வேற்றுமைத் திரிபு

158.மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்
வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ்
சாரியை யுள்வழிச் சாரியை கெடுதலுஞ்
சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலுஞ்
சாரியை யியற்கை உறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலும்
மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்
அன்ன பிறவுந் தன்னியன் மருங்கின்
மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப.

இஃது , இரண்டாம் வேற்றுமைத்திரிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் - மெல்லெழுத்து மிகுமிடத்து வல்லெழுத்தாதலொடு தோன்றுதலும் , வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் - வல்லெழுத்து மிகுமிடத்து மெல்லெழுத்தாதலொடு தோன்றுதலும் , இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் - இயற்கையிடத்து மிகுதி தோன்றுதலும் , உயிர் மிக வருவழி உயிர் கெட வருதலும் - உயிர்மிக வருமிடத்து அவ்வுயிர்கெட வருதலும் , சாரியை உள்வழி சாரியை கெடுதலும் - சாரியையுள்ள இடத்துச் சாரியை கெடுதலும் , சாரியை உள்வழி தன் உருபு நிலையலும் - சாரியை உள்ளவிடத்துச் சாரியையொடு தன்னுருபு நிற்றலும் , சாரியை இயற்கை உறழத்தோன்றலும் - சாரியை பெறுகவென்ற வழிச் சாரியை பெறாது . இயல்பாகிய மொழிகள் வருமொழியினும் நிலைமொழியினும் மிக்கும் திரிந்தும் வருமொழி வல்லெழுத்துக்கள் உறழ்ச்சியாகத் தோன்றுதலும் , உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் - உயர்திணைப் பெயரிடத்துத் தன்னுருபு தொகாதே விரிந்து வருதலும் , அஃறிணை விரவுப்பெயர்க்கு அ இயல நிலையலும் - உயர்திணையோடு அஃறிணை விரவுப்பெயர்க்கும் அவ் வுருபு அவ்வியல்பிலே நிற்றலும் , மெய்பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும் - மெய்பிறிதாய் முடியுமிடத்து இயல்பாய் முடிதலும் , அன்ன பிறவும் - அத் தன்மையன பிற முடிபுகளும் , தன் இயல் மருங்கின் மெய்பெற கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் - தனது இயல்பாகிய கூற்றால் அகத்தோத்தினுட் பொருள் பெற எடுத்தோதப்பட்ட வேற்றுமைப் பொருட்புணர்ச்சியது பொது முடிவினைத் தான் வரைந்து வேறு முடிபிற்றாய் நின்று ஒலிக்கும் ஐகார வேற்றுமைத்திரிபு என மொழிப - ஐகார வேற்றுமையினது வேறுபாட்டுப் புணர்ச்சி என்று சொல்லுவர் புலவர்.

எ - டு: விளக்குறைத்தான் என்பது மெல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்து மிக்கது . மரங்குறைத்தான் என்பது வல்லெழுத்து மிகுவழி மெல்லெழுத்து மிக்கது . தாய்க்கொலை என்பது இயல்பாமிடத்து மிக்கது . பலாக்குறைத்தான் என்பது உயிர்மிக வருவழி உயிர்கெட்டது . வண்டுகொணர்ந்தான் என்பது சாரியை உள்வழிச் சாரியை கெட்டது . வண்டினைக் கொணர்ந்தான் என்பது சாரியை உள்வழித் தன்னுருபு நிலையிற்று . புளிகுறைத்தான் , புளிக்குறைத்தான் , ஆல்குறைத்தான் , ஆற்குறைத்தான் என இவை சாரியை யியற்கை உறழத்தோன்றின. நம்பியைக்கொணர்ந்தான் என்பது உயர்திணைமருங்கின் ஒழியாது வந்தது . கொற்றனைக் கொணர்ந்தான் என்பது விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையது . மண்கொணர்ந்தான் என்பது மெய்பிறிதாகிடத்து இயற்கையாய் வந்தது .

அன்ன பிறவும் என்றதனாற் கொள்வன கழிகுறைத்தான் திணைபிளந்தான் என்பன . பிறவும் அன்ன.

ஒழியாது என்றதனான் ஒரோவழி ஒழிந்தும் வரும் . அவர்க்கண்டு எனவும் , "ஒன்னார்த்தெறலும்" எனவும் இவை உயர்திணையுள் ஒழிந்துவந்தன , மகற்பெற்றான் , மகட்பெற்றான் என இவை விரவுப் பெயருள் ஒழிந்து வந்தன . இவ்விலேசுதன்னானே இவற்றின் முடிபு வேற்றுமையும் கொள்க.

'மெய்பெற' என்றதனான் , உறழ்ச்சியாய் முடிவனவும் கொள்க . மைகொணர்ந்தான் , மைக்கொணர்ந்தான் எனவும் ; வில்கோள் , விற்கோள் எனவும் வரும் . இவ்வாறு திரிந்து முடியாது , அகத்தோத்தில் பொதுமுடிபே முடிபாய்க் கடுக்குறைத்தான் , செப்புக் கொணர்ந்தான் என்றாற்போல்வன அறிந்து கொள்க . இவ்வாறு வேறுபட முடிவது பெரும்பான்மையும் இரண்டாவது வினையோடு முடியும் வழிப்போலும் . அது "தம்மி னாகிய தொழிற்சொன் முன்வரின்" (தொகை மரபு - 14) என நின்ற அதிகாரத்தாற் கொள்ள வைத்தார் போலும் . "தன்னின முடித்தல்" என்பதனான் , ஏழாம்வேற்றுமை வினையொடு முடியும்வழித் திரிபும் கொள்க வரைபாய்வருடை , புலம் புக்கனனே புல்லணற்காளை என வரும் .

(15)