2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

குறில்முன் ஒற்று இரட்டாத இடம்

162.ஆறன் உருபின நான்கன் உருபினும்
கூறிய குற்றொற் றிரட்ட லில்லை
ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்
நெடுமுதல் குறுகு மொழிமுன் னான.

இஃது, உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஆறன் உருபினும் நான்கன் உருபினும் ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும் - ஆறனுருபின்கண்ணும் நான்கனுருபின்கண்ணும் ஈறாகு புள்ளிகள் அகரத்தொடு நிலைபெறும், நெடு முதல் குறுகும் மொழிமுன் கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை - நெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் மொழிக்கண் மேற்கூறிய குற்றொற்று இரட்டல் (ஆறனுருபின்கண்ணும் நான்கனுருபின்கண்ணும்) இல்லை.

எ - டு: தமது, தமக்கு; நமது, நமக்கு என வரும்.

`கூறிய' என்றதனானே1 நெடுமுதல் குறுகாதமொழிக்கு இவ்விருவிதியும் கொள்க. எல்லார் தமதும், எல்லார் தமக்கும் என வரும்.

(19)

1.நெடுமுதல் குறுகாத மொழிகள் தம், நம், நும் என்னும் சாரியை இடைச்சொற்கள், இங்ஙனம் காட்டிய நெடுமுதல் குறுகாத மொழிகட்கு, முன்னர் நன்னூல் விருத்தியுட் காட்டினமையுணர்க.