2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

பனையும் காவும் இன்சாரியை பெறுதல்

170.பனையென் அளவுங் காவென் நிறையும்
நினையுங் காலை இன்னொடு சிவணும்.

இதுவும் அது.

(இ-ள்) பனை என் அளவும் கா என் நிறையும் - பனை என்னும் அளவுப் பெயரும் கா என்னும் நிறைப் பெயரும், தினையும் காலை இன்னொடு சிவணும் - (குறை என்பதனோடு புணருமிடத்து) ஆராயுங்காலத்து இன்சாரியையொடு பொருந்தும்.

எ - டு: பனையின்குறை, காவின்குறை என வரும்.

`நினையுங் காலை' என்றதனான், வல்லெழுத்துப்பேறும் சிறுபான்மை கொள்க. பனைக்குறை காக்குறை என வரும்.

(27)