2. மெய்யீறுகள்

`தாம்' `நாம்' `யாம்' என்னும் மகர ஈறுகளும் அன்ன.

189.தாம்நாம் என்னு மகர இறுதியும்
யாமென் இறுதியும் அதனோ ரன்ன
ஆஎ1ஆகும் யாமென் இறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும்.

இஃது, மகரவீற்றுள் முன்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாம் என் இறுதியும் அதன் ஓர் அன்ன-தாம் நாம் என்று சொல்லப்படும். மகரவீறும் யாம் என்னும் மகரவீறும் மேற்கூறிய நும் என்னும் மகரவீறு போல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடையவாம் யாம் என் இறுதி ஆ எ ஆகும்-யாம் என்னும் மகரவீற்று மொழி-ஆகாரம் ஏகாரமாம்; அ வயின் யகரமெய் கெடுதல் வேண்டும். அவ்விடத்து யகரமாகிய மெய் கெடுதல் வேண்டும்; ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்-ஒழிந்த இரண்டும் நெடியவாகிய முதல் குறுகி நின்று முடியும்.

எ - டு: தம்மை, தம்மொடு; நம்மை, நம்மொடு; எம்மை, எம்மொடு என ஒட்டுக.

`ஆவயின்மெய்' என்றதனால், பிறவயின் மெய்யும் கெடுமெனக் கொள்க. தங்கண், நங்கண், எங்கண் என வரும்.

(16)

(பாடம்)1.ஆஎவ் வாகும்.(நச்.)