இஃது, பல சில என்பவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) தொடரல் இறுதி தம்முன் தாம்வரின்-தொடர் மொழியல்லாத ஈரெழுத்தொருமொழியாகிய பல சில என்னும் அகரவீற்றுச் சொல் தம்முன்னே தாம் வரின், லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்து - தம் ஈற்றில் நின்ற லகரவொற்று றகர வொற்றாய்த் திரித்து முடிதலும் உரித்து. எ - டு:பற்பல கொண்டான் எனவும், சிற்சில வித்தி எனவும் வரும். `தன்முற்றான்' என ஒருமையாற் கூறாது `தம்முன் தாம்வரின்' என்ற பன்மையான், மேல் பல சில என நின்ற இரண்டும் தழுவப் பட்டன. `தொடரலிறுதி தம் முன்வரின்' என்னாது `தாம்' என்றதனான். இம் முடிவின்கண் பலவென்பதன்முன் பலவருக சிலவென்பதன்முன் சில வருக என்பது கொள்ளப்பட்டது. `லகரம் றகரமாம்` என்னாது `லகரம் றகரவொற்றாம்' என்ற ஞாபகத்தான், அகரம் கெடுமென்றானாகக் கொள்க. அருத்தாபத்தி முகத்தால் , தம்முன் தாம்வரின் லகரம் றகரவொற்றா மெனவே , தம் முன் பிற வந்தவிடத்து லகரம் றகரவொற்றாகாது அகரம் கெடுமென்பது கொள்ளப்படும். பல்படை, பல்யானை, சில்படை, சில்வேள்வி என வரும். `தொடரலிறுதி' என்பது சுட்டல்லது ஓரெழுத்தொருமொழி அகரமின்மையின், ஓரெழுத்தொருமொழிமேற் செல்லாதாயிற்று, உரித்தென்றது, அகரவீற்றொருமை பற்றி. (12) 1. (பாடம்) றாகலு. (நச்.)
|