2. ஆகார ஈறு

`ஆன்' என்னும் சொல்

233.ஆனொற் றகரமொடு நிலையிடன் உடைத்தே.

இஃது , அவ்வீற்றுள் ஆ என்றதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஆன்ஒற்று அகரமொடும் நிலைஇடன் உடைத்து - முன்பு பெற்றுநின்ற ஆன் என்னும் சொல்லினது னகரவொற்று அகரத்தொடும் நிற்கும் இடனுடைத்து.

`இடனுடைத்து' என்றதனான் , வன்கணம் ஒழிந்தகணத்து இம் முடிபெனக் கொள்க.

எ - டு: "ஆனநெய்தெளித்து நான நீவி" என வரும் .

`அகரமொடும்' என்ற உம்மையான் , அகரமின்றி வருதலே பெரும்பான்மை எனக் கொள்க.

(30)