இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும் ஒன்றற்கு வல்லெழுத்தினோடு சாரியை விதியும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்) எருவும் செருவும் அம்மொடு சிவணித் திரிபு இடன் உடைய தெரியும் காலை - எரு என்னும் சொல்லும் செரு என்னும் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருந்தி முன் சொன்ன வேற்றுமைப் பொதுவிதியின் வேறுபட்டு முடியும் இடனுடைய ஆராயுங்காலத்து; அம்மின் மகரம் செருவயின் கெடும் - அவ் வம்முச்சாரியையது ஈற்றின் மகரம் செரு என்னும் சொல்லிடத்துக் கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை தம்ஒற்று மிகூஉம் - அவ்வாறு கெட்டவிடத்துச் செரு என்பது வல்லெழுத்தாகிய இயல்பையுடைய தமது ஒற்று மிக்கு முடியும். எ - டு : எருவங்குழி, சேறு, தாறு, பூழி எனவும்; செருவக்களம்; சேனை, தானை, பறை எனவும் வரும். ` தெரியுங்காலை ' என்றதனால், எரு என்பதற்குப் பெரும்பான்மை மெல்லெழுத்துப்பேறும், சிறுபான்மை வல்லெழுத்துப் பேறும், செரு என்பதற்குச் சிறுபான்மை வல்லெழுத்துப்பேறும் கொள்க. எருங்குழி, எருக்குழி, செருக்களம் என வரும். `வல்லெழுத்தியற்கை' என்றதனான் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி அவ்விருமொழிக்கும் அதிகார வல்லெழுத்து வீழ்வும் கொள்க. எருவின் கடுமை, செருவின் கடுமை என வரும். இன்னும் அதனானே, ` அம்மொடு சிவணித் திரிபிடனுடைய' என வல்லெழுத்தின்கண்ணதாக வரைந்து கூறினமையின், அம்முச் சாரியை இயல்புகணத்துக்கண் பெறுவன கொள்க. எருவஞாற்சி, செருவஞாற்சி என வரும். (58)
|