8. புள்ளி மயங்கியல்

(மெய்யீறுகளின் புணர்ச்சி இலக்கணம் உணர்த்துவது)

இவ்வோத்து என்ன பெயர்தோவெனின், புள்ளியீறு வன்கணத்தோடும் சிறுபான்மை பிறகணத்தோடும் மயங்கிப்புணரும் இயல்வு உணர்த்தினமையின் புள்ளிமயங்கியல் என்னும் பெயர்த்து.

1. மெல்லொற்று ஈறுகள்

இருவழியிலும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர்

297.ஞகார ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே
உகரம் வருதல் ஆவயி னான.

இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின், ஞகாரவீறு வன்கணத்தோடு இருவழிக்கண்ணும் புணருமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் - ஞகாரம் ஈற்றின்கண் ஒற்றாகநின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழிக் கண்ணும், வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்துமிகும் - வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாயின் வல்லெழுத்து வருமொழிக்கண் மிக்கு முடியும், ஆவயின் ஆன உகரம் வருதல் - ஆண்டு நிலைமொழிக்கண் உகரம் வருக.

எ - டு : உரிஞுக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; உரிஞுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும்.

(1)