1. மெல்லொற்று ஈறுகள்

`அகம்' முன்கை

316.அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே யாசிரி யர்ககு
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.

இஃது, இவ்வீற்றுள் மரூஉ முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அகம் என் கிளவிக்கு கைமுன்வரின் - அகம் என்னும் சொல்லிற்குக் கை என்னும் சொல் முன்வரின், முதல் நிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன் `மகரவிறுதி' (சூத்திரம்-15) என்றதனான் மகரம் கெட்டுநின்ற நிலைமொழி முதல் நின்ற அகரம் ஒழிய அதன் முன்நின்ற அகரமும் அகரத்தாற் பற்றப்பட்ட ககர மெய்யும் கெட்டு முடிதலும் அவைகெடாது நின்று முடிதலும், வரைநிலை இன்று ஆசிரியர்க்கு-நீக்கும் நிலைமையின்று ஆசிரியர்க்கு; ஆ வயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் - அவ்விரண்டிடத்தும் மெல்லெழுத்து மிக்குமுடிக.

எ - டு : அங்கை, அகங்கை என வரும்.

(20)