1. மெல்லொற்று ஈறுகள்

இயற்பெயர் முன் `தந்தை' என்னும் சொல்

348.இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய்கெட அகரம் நிலையும்
மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே.

இஃது ,இவ்வீற்று விரவுப்பெயருள் இயற்பெயர்க்குத் தொகைமரபினுள் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் - னகாரவீற்று இயற்பெயர் முன்னர்த் தந்தை என்னும் முறைப் பெயர் வருமொழியாய் வரின் , முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் - முதற்கண் மெய்கெட அதன்மேல் ஏறி நின்ற அகரம் கெடாது நிலைபெறும் . அ இயற்பெயர் மெய் ஒழித்து அன் கெடும் - நிலைமொழியாகிய இயற்பெயர் அவ் அன் என்னும் சொல்லின் அகரம் ஏறிநின்ற மெய்யை ஒழித்து அவ் அன் தான் கெட்டு முடியும் .

எ - டு : சாத்தந்தை , கொற்றந்தை என வரும் .

`முதற்கண் மெய்' என்றதனால் சாத்தன்றந்தை கொற்றன்றந்தை என்னும் இயல்பு முடிபும் கொள்க.

(52)