இஃது, குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று. இடைப்படினும் குறுகும் இடன் உண்டு- அவ் வுகரம் புணர்மொழி இடைப்படினும் குறுகும் இடமுண்டு, (அதன் இடமும் பற்றுக்கோடும் யாண்டோ பெறுவதெனின்) கடப்பாடு அறிந்த புணரியலான- அதன் புணர்ச்சி முறைமை அறியும் குற்றியலுகரப் புணரியலின் கண்ணே. `இடைப்படினும் குறுகும்' என மொழி மாற்றி உரைக்க. அக்குற்றியலுகரப் புணரியலுள் "வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை யியற்கை நிலையலு முரித்தே" (குற்றியலுகரப் புணரியல்-4) என்பதனுள் வல்லொற்றுத்தொடர் மொழியீற்று வல்லெழுத்து வருவழியும் இடம். அவ்வல்லொற்றுத் தொடர்மொழியீற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு. எ - டு: செக்குக்கணை, சுக்குக்கோடு என வரும். `இடன்' என்றதனான், இக்குறுக்கும் சிறுபான்மை என்றுணர்க. (4)
|