2. இடையொற்று ஈறுகள்

ஏழ் முன் அளவு முதலிய பெயர்கள்

390.அளவு நிறையும் எண்ணும் வருவழி
நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும்
கடிநிலை யின்றே ஆசிரியர்க்கே.

இஃது, மேலதற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இ-ள்) அளவும் நிறையும் எண்ணும் வருவழி - (அவ் ஏழ் என்னும் எண்ணுப்பெயர்) அளவுப் பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் (வருமொழியாய்) வருமிடத்து, நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும் ஆசிரியர்க்கு கடிநிலை இன்று - நெடுமுதல் குறுகுதலும் (ஆண்டு) உகரம் வருதலும் ஆசிரியர்க்கு நீக்கும் நிலைமை இன்று.

எ - டு : எழுகலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு, பலம் எனவும்; எழுகழஞ்சு ; தொடி, பலம் எனவும்; எழுமூன்று , எழுநான்கு எனவும் வரும்.

`நிலையின்று' என்றதனான், வன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இம்முடிபு கொள்க.

எழுகடல், சிலை, திசை, பிறப்பு என வரும்.

(94)