3. குற்றுகரப் பொதுப் புணர்ச்சி

அதற்கு, வேறு முடிபு

413.ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே.

இஃது, எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று.

(இ-ள்) இன ஒற்று இடை மிகா மொழியுமார் உள - இன ஒற்று இடை(யில்) மிக்கு முடியாத மொழிகளும் உள. வல்லெழுத்து மிகல் அ திறத்து இல்லை - வல்லெழுத்து மிக்கு முடிதல் அக்கூற்றுள் இல்லை.

எ - டு : நாகுகால் ; சினை ,தலை ,புறம் எனவும் ; வரகுகதிர் ; சினை, தலை, புறம் எனவும் வரும்.

`அத்திறம்' என்றதனால், உருபிற்கு எய்திய சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.

யாட்டின்கால். முயிற்றின்கால் , நாகின்கால் ,வரகின்கால் என வரும்.

(7)