4. குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி

அல்வழியிற் சுட்டுப்பெயர்

424.முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி யான.

இஃது, மேற்கூறிய ஈற்றுள் சுட்டுமுதல் ஈற்று உகரத்திற்கு ஒரு வழி அல்வழி முடிபு கூறுகின்றது.

(இ-ள்) முன் உயிர் வரும் இடத்து- (அவற்றுள் சுட்டு முதல் ஆய்தத் தொடர்மொழி உகர ஈறு தன்) முன்னே உயிர் வரும் இடத்து, ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும் - ஆய்தப்புள்ளி (முன்பு போலக் கெடாது) நிலைபெற்று முடிதல் வேண்டும், அல்வழியான - அல்வழிக்கண்.

எ - டு : ஆஃதடை, இஃதடை, உஃதடை, ஆடை, இலை என ஒட்டுக.

`முன்' என்றதனான், வேற்றுமைக்கண்ணும் உயிர் முதல்மொழி வந்த இடத்து அஃதடைபு , அஃதாட்டம் என ஆய்தம் கெடாமை கொள்க.

(18)