5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

எண்ணுப் பெயரொடு பத்து

438.ஒன்றுமுத லொன்பான் இறுதி முன்னர்
நின்ற பத்த னொற்றுக்கெட ஆய்தம்
வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப
கூறிய இயற்கைக் குற்றிய லுகரம்
ஆற னிறுதி அல்வழி யான.

இஃது, எண்ணுப் பெயரோடு எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது.

ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் நின்ற பத்தன் ஒற்று கெட ஆய்தம் வந்து இடைநிலையும் இயற்கைத்து என்ப - ஒன்று முதலாக ஒன்பது ஈறாகச் சொல்லப்படுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் (வருமொழியாய் வந்து) நின்ற பத்து என்னும் சொல்லினது தகர ஒற்றுக் கெட ஆய்தமானது வந்து இடை(யில்) நிலைபெறும் இயல்பையுடைத்தென்று சொல்லுவர் (புலவர்), ஆறன் இறுதி அல்வழி குற்றியலுகரம் கூறிய இயற்கை- (அவற்றுள்) ஆறு என்னும் ஈறு அல்லாத இடத்துக் குற்றியலுகரம் மேற்கூறிய இயற்கை(யாய்) மெய்யோடும் கெட்டு முடியும்.

எ - டு : ஒருபஃது, எருபஃது என ஒட்டுக.

`வந்து' என்றதனால், ஆய்தமாய்த் திரியாது கெட்டு ஒருபது என்றுமாம்.

(32)