5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஒரு' `இரு' முன் உயிர் முதன்மொழி

455.முதலீ ரெண்ணின்முன் உயிர்வரு காலைத்
தவலென மொழிப உகரக் கிளவி
முதனிலை நீடல் ஆவயி னான.

இதுவும் அது.

முதல் ஈர் எண்ணின்முன் உயிர் வரு காலை - முற்பட்ட இரண்டு எண்ணின்முன் உயிர் முதல்மொழி வருங்காலத்து , உகரக் கிளவி தவல் என மொழிப - உகரமாகிய எழுத்துக் கெடும் என்று சொல்லுவர் (புலவர்), முதல்நிலை ஆவயின் நீடல் - (அவ்வெண்ணின் முதற்கண்) நின்ற எழுத்துக்கள் அவ்விடத்து நீண்டு முடியும்.

எ - டு : ஓரகல் , ஈரகல் , ஓருழக்கு , ஈருழக்கு என வரும்

(49)